ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதன் அண்டை நாடுகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை, டிசம்பர் 18, 2025 அன்று) பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வானிலை டிசம்பர் 19, 2025 வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த வாரத்தில் பலத்த மழையைக் கொண்டு வந்துள்ள நிலையில், நாளை (வியாழக்கிழமை) நிலைமைகள் தீவிரமடையும் என்றும், இப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிசி வானிலை அறிக்கையின்படி, தற்போதைய புயல் பகலில் சவுதி அரேபியாவை பாதிக்கும் என்றாலும், இரவில் கிழக்கு நோக்கி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நோக்கி நகரும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் மின்னல், இடி, ஆலங்கட்டி மழையுடன் கூடிய பல்வேறு தீவிர மழையை பொதுமக்கள் எதிர்பார்க்கலாம் என்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. மேலும் தென்கிழக்கு முதல் வடமேற்கு திசைகளில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் காற்று தூசி மற்றும் மணலை கிளப்புவதால் தெரிவுநிலை (visibility ) குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வானிலை ஆய்வு மையம் குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள் இருக்கவும், எச்சரிக்கையாக இருக்கவும், அதிகாரிகள் அளிக்கும் அனைத்து அறிவுறுத்தல்களையும் பின்பற்றவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் மேகங்கள் மேற்கிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி வருவதால், அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் சீற்றமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் அபுதாபியில் 19ºC முதல் 28ºC வரையிலும், துபாயில் 19ºC முதல் 26ºC வரையிலும், ஷார்ஜாவில் 18ºC முதல் 25ºC வரையிலும் வெப்பநிலை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel