துபாயில் இருந்து ஹைதராபாத் செல்லும் எமிரேட்ஸ் விமானத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (05/12/2025) வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக விமான நிறுவனம் செய்தி ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கு புறப்பட்ட EK526 விமானத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அதிகாரிகள் விமான நிறுவனத்தை எச்சரித்ததாக எமிரேட்ஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, எமிரேட்ஸின் தரைக் கட்டுப்பாட்டுக் குழுவின் முழு ஆதரவுடன் நிலையான பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், மேலும் பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு பயணிகள் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்..
மேலும், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய்-ஹைதராபாத் விமானம் தொடர்பான வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக இந்திய செய்தி நிறுவனமான PTI தெரிவித்துள்ளது. இதனையடுத்து விமானம் உள்ளூர் நேரப்படி காலை 8:30 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது.
அதன் பின்னர், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியாவில் உள்ள அதிகாரிகள் அனைத்து நிலையான நெறிமுறைகளையும் பின்பற்றியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, “எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எமிரேட்ஸின் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது” என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், மும்பை, ஹைதராபாத், டெல்லி, சென்னை, பெங்களூரு, கொச்சி, அகமதாபாத், கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இந்திய இடங்களுக்கு விமான சேவைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel