ஐக்கிய அரபு அமீரகம் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பரபரப்பான பயணக் காலத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், சர்வதேசப் பயணிகளின் திடீர் அதிகரிப்பால், சொகுசு கார்களை வாடகைக்கு எடுப்பதற்கான தேவையும் சாதனை அளவை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் துபாய் சர்வதேச விமான நிலையம் நடப்பு டிசம்பர் மாதத்தில் 8.7 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது, இது விமான நிலையத்தின் வரலாற்றிலேயே மிகவும் பரபரப்பான மாதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஆண்டு இறுதி விடுமுறைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்காக பெருமளவிலான பயணிகள் வருவதால், தற்போது தினசரி வருகை 300,000-ஐ கடந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் ஏற்கனவே 2025-ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 15.7 மில்லியன் பார்வையாளர்களை வரவேற்றுள்ளது, ஹோட்டல்கள் கிட்டத்தட்ட முழு கொள்ளளவில் இயங்குவது முதல் பிரீமியம் வாடகை கார்களுக்கான முன்பதிவுகளில் தெளிவான அதிகரிப்பு வரை அதன் தாக்கம் நகரம் முழுவதும் தெளிவாகத் தெரிகிறது.
பிரீமியம் SUV-களுக்கு அதிக தேவை
இந்த குளிர்காலத்தில், சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் SUV-களுக்கான தேவை மிகவும் வலுவாக உள்ளது. பிரபலமான தேர்வுகளில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர், போர்ஷே கெய்ன், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், BMW X5 மற்றும் X6, மற்றும் மெர்சிடிஸ் GLE63 போன்ற மாடல்கள் அடங்கும்.
தொழில்துறை நிர்வாகிகளின் கூற்றுப்படி, அல்ட்ரா-லக்ஸரி (ultra luxury) பிரிவில், உச்ச பயண காலங்களில் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் மற்றும் பென்ட்லி பென்டேகா வாகனங்கள் பொதுவாக முதலில் முழுமையாக முன்பதிவு செய்யப்படுகின்றன என கூறப்படுகின்றது. பல பார்வையாளர்கள் தங்கள் தங்கியிருக்கும் காலம் முழுவதும் ஒரே வாகனத்தை வைத்திருக்க விரும்புவதாகவும், இதன் சராசரி வாடகைக் காலம் இப்போது நான்கு முதல் 14 நாட்கள் வரை உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த குளிர்காலத்தில் சுமார் 80 சதவீத முன்பதிவுகள் நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே செய்யப்படுகின்றன என்றும், அதே சமயம் 20 சதவீதம் 48 மணி நேரத்திற்குள் உறுதி செய்யப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. துபாயில் குறிப்பிட்ட அளவு இருப்பு காரணமாக ஸ்போர்ட் SUV-கள் வேகமாக முன்பதிவாகிவிடுவதாகவும் கூறப்படுகிறது.
ஸ்போர்ட்ஸ் மற்றும் காம்பாக்ட் சொகுசு கார்கள் மீது அதிக ஆர்வம்
முந்தைய ஆண்டுகளில் இல்லாதளவு, இந்த ஆண்டு வாடகைப் போக்குகள் மாறிவருவதாக பயண ஆப்பரேட்டர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக குறுகிய காலம் தங்கும் பயணிகள் இரண்டு இருக்கைகள் கொண்ட கார்கள், கன்வெர்டிபிள்கள் மற்றும் காம்பாக்ட் சொகுசு எஸ்யூவிகளை தேர்வு செய்வதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
வாடகை நிறுவனங்கள் அளித்த தகவலின் படி, தற்போது சராசரி வாடகைக் காலம் ஐந்து முதல் ஏழு நாட்களாக உள்ளது. இதற்கான தினசரி கட்டணங்கள் ஆரம்ப நிலை சொகுசு மாடல்களுக்கு 3,500 திர்ஹம்ஸ் முதல் 4,500 திர்ஹம்ஸ் வரையிலும், உயர் செயல்திறன் கொண்ட வாகனங்களுக்கு 7,500 திர்ஹம்ஸ் வரையிலும் உள்ளன. காம்பாக்ட் SUV-கள் மற்றும் சூப்பர்கார்கள் முன்பதிவாகும் கார்களில் முன்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் முன்னிலை
இந்த டிசம்பர் மாதத்தில் சொகுசு கார் வாடகைக்கான பெரும்பாலான தேவை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிலிருந்து வரும் பார்வையாளர்களிடமிருந்து வருவதாகவும், வாடகை நிறுவனங்கள் முதல் முறையாக சொகுசு கார்களை வாடகைக்கு எடுப்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காண்பதாகவும் பயண ஆப்பரேட்டர்கள் கூறியுள்ளனர். அதே சமயம் எளிதான ஆன்லைன் முன்பதிவு அமைப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவங்களால் மீண்டும் மீண்டும் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
பயணிகள் சொகுசு காரை வாடகைக்கு எடுக்க என்ன தேவை?
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு சொகுசு காரை வாடகைக்கு எடுக்க, பார்வையாளர்களுக்கு பொதுவாக பின்வருபவை தேவைப்படுகின்றன:
- செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
- நுழைவு முத்திரையுடன் (entry stamp) கூடிய பாஸ்போர்ட்
- குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
பல வாடகை நிறுவனங்கள் இப்போது பிரீமியம் வாகனங்களுக்கு எளிதாக்கப்பட்ட சரிபார்ப்பு, முன்பணம் இல்லாத விருப்பங்கள், ஓட்டுநர் சேவைகள் மற்றும் கூடுதல் காப்பீட்டு வசதிகளை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. விமான நிலையங்களில் சாதனை அளவிலான பயணிகள் போக்குவரத்து மற்றும் ஹோட்டல்கள் முழுமையாக நிரம்பியிருப்பதால், துபாயின் சொகுசு கார் வாடகைச் சந்தையானது நகரத்தின் பரபரப்பான குளிர்காலப் பருவத்தை பிரதிபலிக்கிறது.
சிறந்த வானிலை, முக்கிய உலகளாவிய நிகழ்வுகள் மற்றும் அதிக செலவு செய்யும் பார்வையாளர்கள் ஆகியோர் துபாய் சாலைகளை பிரீமியம் வாகனங்களின் கண்காட்சியாக மாற்றி வருகின்றனர். இது சொகுசு வாகனத் துறைக்கு இதுவரை இல்லாத வலிமையான குளிர்காலப் பருவங்களில் ஒன்றாக அமைவதாக தொழில்துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel