புனித ரமலான் மாதம் நெருங்கி வருவதையொட்டி, துபாயின் கல்வி ஒழுங்குமுறை ஆணையம், நோன்பு காலத்தில் கற்றலையும் நல்வாழ்வையும் சமநிலைப்படுத்தும் நோக்கில், மாணவர்களுக்கான பள்ளி நேரத்தைக் குறைத்தும், உடல் உழைப்பு சார்ந்த செயல்பாடுகளை இலகுவாக்கியும் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக துபாயின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) வெளியிட்டுள்ள அறிக்கையில், ரமலான் மாதத்தில் தனியார் பள்ளிகளுக்கான பள்ளி நேரத்தை அதிகபட்சம் ஐந்து மணி நேரமாகக் குறைத்துள்ளதுடன், நோன்பு நோற்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகளிலிருந்து விலக்கு அளிக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
திருத்தப்பட்ட இந்த அட்டவணை, ரமலானின் உணர்வைப் பிரதிபலிப்பதுடன், கற்றலில் தொடர்ச்சியை உறுதிசெய்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவருக்கும் ஏற்படும் உடல் மற்றும் கல்வி சார்ந்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்றும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, நோன்பு கடைபிடிக்கும் மாணவர்கள் இந்த மாதத்தில் உடற்கல்வி வகுப்புகளில் பங்கேற்கக் கட்டாயப்படுத்தப்படக் கூடாது என்று KHDA கூறியுள்ளது. தேவைப்படும் இடங்களில், பள்ளிகள் பொருத்தமான மாற்று கற்றல் நடவடிக்கைகளை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
KHDA வெளியிட்டுள்ள ஆலோசனைகளின் படி, வெள்ளிக்கிழமைகளில், தனியார் பள்ளிகள் வகுப்புகளை காலை 11.30 மணிக்கு முன்னதாகவே முடிக்க வேண்டும், இது மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்துகொள்ள போதுமான நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.
ரமலான் மாதத்தில் பள்ளி-குடும்பப் பங்களிப்பை வலுப்படுத்தும் மற்றும் நெகிழ்வான கற்றல் ஏற்பாடுகளை ஆதரிக்கும் நோக்கில், தினசரி தொடக்க மற்றும் முடிவு நேரங்களை நிர்ணயிக்கும்போது பெற்றோரை கலந்தாலோசிக்குமாறும் தனியார் பள்ளிகளை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள், புனித மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் சமூக, மத மற்றும் சுகாதாரக் கருத்தாய்வுகளை மதிக்கும் ஒரு ஆதரவான கல்விச் சூழலை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன என்று KHDA வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel