துபாய் எமிரேட்டானது, பைடுவின் அப்பல்லோ கோ (Baidu’s Apollo Go) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முழுமையான தானியங்கி டாக்ஸிகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியதன் மூலம், போக்குவரத்துத் துறையின் எதிர்காலத்தை நோக்கி ஒரு பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது. இந்த முயற்சி, ஒரு புத்திசாலித்தனமான, நிலையான போக்குவரத்துச் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான அமீரகத்தின் பரந்த தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும்.
துபாயின் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும், துபாய் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், மதீனாத் ஜுமைராவில் நடைபெற்ற உலக அரசாங்கங்கள் உச்சிமாநாட்டிற்கு, ஓட்டுநர் இல்லாத RT6 டாக்சிகளில் ஒன்றில் பயணம் செய்து இந்த அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இந்தப் பயணத்தின் போது, செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட சென்சார்கள் போன்றவற்றை பயன்படுத்தி இந்த வாகனம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஷேக் ஹம்தானுக்கு விளக்கப்பட்டது. இந்தத் தொழில்நுட்பங்கள் ஒன்றிணைந்து, போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் பாதுகாப்பான மற்றும் சீரான பயணத்தை உறுதி செய்கின்றன. இந்த செயல்விளக்கம், அடுத்த தலைமுறை போக்குவரத்துத் தீர்வுகளை துபாய் விரைவாக ஏற்றுக்கொள்வதை எடுத்துக்காட்டியது.
அதிகாரிகள் வெளியிட்டுள்ள விபரங்களின் படி, இந்த டிரைவர் இல்லா டாக்ஸி சேவை 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிமுக நிகழ்வில், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொலைநிலை வேலைப் பயன்பாடுகளுக்கான மாநில அமைச்சர் ஒமர் சுல்தான் அல் ஒலாமா மற்றும் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) பொது இயக்குநர் மற்றும் தலைவர் மத்தார் அல் தாயர் ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
மேம்பட்ட தொழில்நுட்பம்
RT6 என்பது பைடுவின் தானியங்கி டாக்ஸியின் ஆறாவது தலைமுறையாகும், மேலும் இது பெரிய அளவில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உயர் துல்லியமான லிடார் (LiDAR), பல-பட்டை ரேடார் அமைப்புகள் மற்றும் மேம்பட்ட கேமராக்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட சென்சார்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இவை வாகனம் அதன் சுற்றுப்புறங்களைக் கண்டறியவும், போக்குவரத்து மாற்றங்களுக்குப் பதிலளிக்கவும் மற்றும் நிகழ்நேர ஓட்டுநர் முடிவுகளை எடுக்கவும் அனுமதிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், இதன் சாஃப்ட்வேர், நேரலைத் தரவு, உயர்-வரையறை மேப் மற்றும் ஆழமான கற்றல் வழிமுறைகளை ஒருங்கிணைத்து, சிக்கலான நகர்ப்புறச் சூழல்களில் பாதுகாப்பாகப் பயணிக்க உதவுகிறது. இந்த அமைப்பு போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுகிறது மற்றும் பாதசாரிகள், இன்டர்செக்ஷன்கள் மற்றும் பிற வாகனங்களுடன் சீராக செல்லும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உலகளவில், அப்பல்லோ கோவின் தானியங்கி வாகனங்கள் 150 மில்லியன் கிலோமீட்டருக்கும் மேல் பயணித்துள்ளன மற்றும் 10 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் இல்லாத பயணங்களை நிறைவு செய்துள்ளன, இது வணிக நடவடிக்கைகளுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது.

ஓட்டுநர் இல்லாத டாக்ஸி திட்டம், துபாயின் RTA மற்றும் பைடு அப்பல்லோ கோ ஆகியவற்றுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பின் விளைவாகும். கடந்த ஆண்டில் நடைபெற்ற 2025 உலக அரசாங்கங்கள் உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன, அதைத் தொடர்ந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது மற்றும் செயல்பாட்டு சோதனைகள் தொடங்கப்பட்டன. ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் முதல் சாலைவழி செயல்பாடுகள் வரை, முழு செயல்முறையும் வெறும் 10 மாதங்களில் நிறைவடைந்தது. இது துபாயின் திறமையான விதிமுறைகள் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்பைப் பிரதிபலிக்கிறது.
துபாயில் புதிய செயல்பாட்டு மையம்
பைடு அப்பல்லோ கோ நிறுவனம், சீனாவுக்கு வெளியே தனது முதல் செயல்பாட்டு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை துபாய் சயின்ஸ் பார்க்கில் திறந்துள்ளது. 2,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையத்தில், ஒரு கட்டளை மையம், சிமுலேஷன் (simulation) மற்றும் பயிற்சி அறைகள், மற்றும் பராமரிப்புப் பகுதிகள் ஆகியவை அடங்கும்.
இந்த மையம் வாகனங்களின் செயல்திறனைக் கண்காணித்து, சாஃப்ட்வேர் புதுப்பிப்புகளை நிர்வகித்து, ஆய்வுகளை மேற்கொண்டு, தன்னாட்சி வாகனங்களின் பாதுகாப்பான மற்றும் சீரான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு சோதனைகளுக்கு ஆதரவளிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தத் தொடக்கம், AI தொழில்நுட்பம் சார்ந்த, ஸ்மார்ட் மற்றும் நிலையான போக்குவரத்து நோக்கிய துபாயின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இது போக்குவரத்துத் திறனை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, எதிர்கால நகர்ப்புறப் போக்குவரத்தில் உலகளாவிய தலைவராக துபாயின் நிலையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இனி வரும் ஆண்டுகளில் தன்னாட்சி வாகனங்களின் எண்ணிக்கையை 1,000-க்கும் அதிகமாக விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.