செயற்கை நுண்ணறிவு (AI) என்ற தொழில்நுட்பமானது மக்கள் வாழும் விதம், வேலை செய்யும் விதம் மற்றும் சேவைகளை அணுகும் விதத்தை விரைவாக மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் நிலையில், துபாய் அன்றாட பயன்பாடுகளை AI தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வருவதன் மூலம் ஒரு படி முன்னேறி வருகிறது. ஆம், துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் (DEWA) தனது சேவைகளை ChatGPT-யில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், துபாயில் வசிப்பவர்கள் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை சரிபார்ப்பதில் இருந்து EV சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிவது வரை, ஆணையத்தின் சேவைகள் அனைத்தையும் ChatGPT மூலம் நேரடியாக அணுகலாம் என்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, அரசாங்க சேவைகளை விரைவாகவும், புத்திசாலித்தனமாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கும் துபாயின் பரந்த உந்துதலைப் பிரதிபலிக்கிறது. AI தளங்கள் சமீபகாலமாக தகவல் மற்றும் ஆதரவிற்கான ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ள நிலையில், ஒருங்கிணைப்பு காத்திருப்பு நேரங்களைக் குறைத்தல், உராய்வைக் குறைத்தல் மற்றும் 24 மணி நேர உதவியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த அறிமுகத்தின் மூலம், DEWA ஆனது AI தளங்கள் வழியாக தனது சேவைகளை வழங்கும் உலகின் முதல் அரசாங்க அமைப்பு மற்றும் முதல் பயன்பாட்டுச் சேவை வழங்குநர் என்ற பெருமையைப் பெறுகிறது.
அதுமட்டுமல்லாமல், அதன் நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் தரவு தனியுரிமை கட்டமைப்புக்கு இணங்க, மேலும் பல சேவைகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து DEWA-வின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சயீத் முகமது அல் டாயர் அவர்கள் கூறுகையில், இந்த முயற்சி, துபாயில் பட்டியலிடப்பட்ட இந்த பயன்பாட்டுச் சேவை நிறுவனத்தை உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு-சார்ந்த பயன்பாட்டுச் சேவை நிறுவனமாக நிலைநிறுத்துவதில் ஒரு முக்கிய படியாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், ChatGPT ஆப்ஸ் டைரக்டரி மூலம் DEWA சேவைகளை அறிமுகப்படுத்துவது, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பாதுகாப்பான, தடையற்ற மற்றும் முன்கூட்டிய சேவைகளை வழங்கும் அதே வேளையில், மேம்பட்ட ஸ்மார்ட் தீர்வுகளைப் பின்பற்றுவதற்கான துபாயின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இந்த முயற்சி, பாரம்பரிய டிஜிட்டல் சேவை மாதிரிகளிலிருந்து விலகி, உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தளங்களில் உட்பொதிக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த அமைப்பை நோக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது என்றும், இது ChatGPT போன்ற தளங்கள் மூலம் நேரடி அணுகலை செயல்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. OpenAI-யின்படி, கடந்த ஆண்டு நாட்டில் ChatGPT-யின் பயனர் தளம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. சுமார் 18-24 வயதுடைய குடியிருப்பாளர்களில் 60 சதவீதம் பேரும் மற்றும் 25-34 வயதுடையவர்களில் பாதி பேரும் ஒவ்வொரு வாரமும் இந்தத் தளத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பது புள்ளிவிபரங்களில் தெரிய வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel