திமோர்-லெஸ்டே (Timor-Leste) ஜனாதிபதியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஜோஸ் ராமோஸ்-ஹோர்டா, உலக அமைதியைக் கட்டியெழுப்புவதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைதியான மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பாராட்டி, அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்களை பரிந்துரைக்கப் போவதாக கூறியுள்ள நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
துபாயில் நடைபெற்ற உலக அரசாங்க உச்சி மாநாட்டில் (World Government Summit) ‘CNN’ ஊடக நிருபர் எலினி ஜியோகோஸுடன் உரையாடியபோது ராமோஸ்-ஹோர்டா இதனைத் தெரிவித்துள்ளார். நோபல் அமைதிப் பரிசு பெற்றவரான ராமோஸ்-ஹோர்டாவிடம், அமைதிப் பரிசுக்கு தகுதியான வேட்பாளர்களைக் கண்டறிந்து பரிந்துரைப்பதில் அவரது சாதனை குறித்து கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில் “நான் யாரையாவது பரிந்துரைக்கப் போகிறேன் என்றால், நான் ஷேக் முகமதுவை பரிந்துரைக்கிறேன் என்று சொல்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதாபிமான மற்றும் இராஜதந்திர முயற்சிகளை உலகம் பெரும்பாலும் கவனிக்கவில்லை என்று கூறிய அவர், “அனைவருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தைப் பற்றி, துபாய் மற்றும் அபுதாபியைப் பற்றி தெரியும், ஆனால் இந்த சிறிய நாடு, மிகவும் பணக்காரர்களாக இருந்தாலும், பல மனிதாபிமான முயற்சிகளுக்கு எவ்வாறு ஆதரவளித்தது என்பது அவர்களுக்குத் தெரியாது” என்றும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது உலகளவில் வளர்ச்சி மற்றும் மனிதாபிமான பங்களிப்புகளில் நாடு மிக உயர்ந்த இடத்தில் உள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
கூடுதலாக, சர்வதேச மோதல்களுக்கு மத்தியஸ்தம் செய்வதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்கையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பெரும்பாலானவை கவனத்தை ஈர்க்கவில்லை என்று கூறியதுடன், “திரைக்குப் பின்னால், அமைதியாக, அவர்கள் எரித்திரியா மற்றும் எத்தியோப்பியா போன்ற பல மோதல்களில் மத்தியஸ்தம் செய்துள்ளனர். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான சமீபத்திய பேச்சுவார்த்தைகள் கூட அபுதாபியில் நடத்தப்பட்டன.” என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் தனது மனிதாபிமானப் பணிகளை உலகளவில் விரிவுபடுத்தி வரும் நிலையில் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. காசாவில், அமீரகம் அவசர உதவிகளை வழங்கியது, கள மருத்துவமனைகளை அமைத்தது மற்றும் காயமடைந்த பொதுமக்களை வெளியேற்றவும் சிகிச்சை செய்யவும் உதவியது.
அதேபோல், இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது, அமீரகம் நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது மற்றும் ஆபிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதன் நீண்டகால அபிவிருத்தி மற்றும் உதவித் திட்டங்களைத் தொடர்கிறது.
இத்தகைய மனிதாபிமான நிவாரணம் மற்றும் அமைதியான ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்கிற்கு சர்வதேச அங்கீகாரம் அதிகரித்து வருவதை ராமோஸ்-ஹோர்டாவின் கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன என கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel