மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு மத்தியில், லைசென்ஸ் பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் துபாய் எமிரேட் சுமார் 120,000 ஓட்டுநர் உரிமங்களை வழங்கிஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் 119,188 ஓட்டுநர் உரிமங்களை வழங்கியுள்ளது. இதில் 96,400 புதிய ஓட்டுநர் உரிமங்களும், ஐக்கிய அரபு அமீரக உரிமத்துடன் நேரடியாக மாற்றிக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட நாடுகளிலிருந்து பெறப்பட்ட 22,788 ஓட்டுநர் உரிமங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவிங் லைசென்ஸ் வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், ஓட்டுநர் பயிற்சி பெறுபவர்களைப் பொறுத்தவரை, வாகனம் ஓட்டுவது என்பது வெறும் தேர்வில் தேர்ச்சி பெறுவதைத் தாண்டிய ஒரு விஷயமாக மாறியுள்ளது. நிஜ உலகச் சாலைச் சூழல்களைக் கையாள்வதற்கு ஓட்டுநர்களைத் தயார்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி, ஓட்டுநர் பயிற்சிப் பயணத்தின் அனைத்து நிலைகளிலும் ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட சிமுலேட்டர்களின் (simulators) பயன்பாட்டை RTA விரிவுபடுத்தி வருகிறது.
இதன் மூலம் துபாயின் பரந்த சாலைப் பாதுகாப்பு இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், ஓட்டுநர் திறனையும் விழிப்புணர்வையும் வளர்க்கும் வகையில் தனது பயிற்சி முறை வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பான ஓட்டுதல் (Defensive driving) மற்றும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம்
ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள் பயன்படுத்தும் நடைமுறைப் பயிற்சிகளை RTA தொடர்ந்து புதுப்பித்து, அவற்றை சர்வதேச நடைமுறைகள் மற்றும் சாலைப் பாதுகாப்புத் தரநிலைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்து வருகின்றது.
இதனடிப்படையில் பாதுகாப்பான மற்றும் முன்னெச்சரிக்கையான ஓட்டுதல் முறைக்கு (defensive and preventive driving) முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது; இதில் பயிற்சி பெறுபவர்கள் வாகனக் கட்டுப்பாடுகளைக் கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், ஆபத்துகளை முன்கூட்டியே கணிப்பதற்கும் திடீர் மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படுவதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்.
அதே போல் தேர்வு முறையிலும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தேர்வு மைதானங்களில் உள்ள தனது ஸ்மார்ட் தேர்வு அமைப்பு, செயற்கை நுண்ணறிவு (AI), கேமராக்கள் மற்றும் ஸ்மார்ட் சென்சார்களைப் பயன்படுத்தி, தரப்படுத்தப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் பயிற்சி பெறுபவர்களின் செயல்திறனை மதிப்பிடுவதாக RTA தெரிவித்துள்ளது.
அத்துடன் ஓட்டுநர்கள் தங்கள் உரிமங்களைப் பெறுவதற்கு முன் போதுமான அளவு தயாராக இருப்பதை உறுதி செய்வதோடு, மதிப்பீடுகளை மிகவும் துல்லியமானதாகவும், பாரபட்சமற்றதாகவும் மற்றும் வெளிப்படையானதாகவும் மாற்றுவதே இதன் நோக்கமாகும் எனவும் RTA கூறியுள்ளது.
மேலும் உரிமம் பெறும் செயல்முறையானது, போக்குவரத்து கோப்பைத் (traffic file) திறப்பது மற்றும் கண் பரிசோதனையை (eye test) முடிப்பது என பல நிலைகளை ஒன்றிணைக்கிறது.
பயிற்சி பெறுபவர்கள் பாட தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, நடைமுறைப் பயிற்சியை மேற்கொள்கின்றனர். இதில் அத்தியாவசியமான ஓட்டுநர் திறன்கள், தற்காப்பு ஓட்டுதல் மற்றும் அவசரகால சூழ்ச்சிகள் ஆகியவை அடங்கும். இதைத் தொடர்ந்து அக மதிப்பீடுகள் மற்றும் வாகன நிறுத்துமிடச் சோதனைகளும் நடத்தப்படுகின்றன.
இறுதிக் கட்டமாக RTA-வின் சாலைச் சோதனை உள்ளது. இது, பயிற்சி பெறுபவர் துபாய் ஓட்டுநர் உரிமம் பெறத் தயாராக உள்ளாரா என்பதைத் தீர்மானிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.