UAE: அனைத்து பயணிகளுக்கும் ICA/GDRFA ஒப்புதல் தேவையில்லை… உறுதி செய்த இந்திய, அமீரக விமான நிறுவனங்கள்…!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் இப்போது பயணத்திற்கு முன் GDRFA அல்லது ICA-வின் ஒப்புதல் இல்லாமலேயே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்யலாம் என அமீரக அரசு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விமான நிறுவனங்கள் தங்களது பயண நெறிமுறைகளை புதுப்பித்து வருகின்றன.
இது குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட செல்லுபடியாகும் விசாவுடன் அமீரக குடியிருப்பாளர்கள் மீண்டும் அமீரகம் வர அனுமதிக்கப்படுவார்கள். ஆறு மாதங்களுக்கும் மேலாக நாட்டிற்கு வெளியே தங்கியிருக்கும் நபர்களுக்கும் இது பொருந்தும்,” என்று அபுதாபியை மையமாக கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
அதே போல் துபாயை மையமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபாய் செல்லும் பயணிகளுக்கான பயண நெறிமுறைகளை சனிக்கிழமை புதுப்பித்துள்ளது. அதில் “அனைத்து ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களும் இப்போது GDRFA அல்லது ICA அனுமதிகள் இல்லாமல் துபாய்க்கு பயணம் செய்யலாம்.” என கூறியுள்ளது.
இதற்கிடையில், ஷார்ஜாவை மையமாக கொண்டு இயங்கும் ஏர் அரேபியா விமானம் திரும்பும் பயணிகளுக்கு விமானத்தை முன்பதிவு செய்வதற்கு முன் uaeentry.ica.gov.ae ஐப் பார்வையிடுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் “ஷார்ஜா அல்லது வேறு ஏதேனும் எமிரேட்டில் வசிப்பவராக இருந்தால் பயணத்திற்கு முன் ஒப்புதல் பெற தேவையில்லை” என்றும் அதன் இணையதளத்தில் விளக்கியுள்ளது.
அத்துடன் ஐக்கிய அரபு அமீரகதில் வசிப்பவர்களுக்கு பயணத்திற்கு முந்தைய ICA/GDRFA அனுமதிகள் இனி தேவையில்லை என்பதை இந்தியாவின் ஏர் இந்தியாவும் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. அதே போல் மற்ற தனியார் இந்திய விமான நிறுவனங்களும் இதே போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் வெள்ளிக்கிழமை மாலை பிற்பகுதியில் அறிவித்த கொரோனா கட்டுப்பாடுகளின் சமீபத்திய தளர்வுகளின்படி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தடுப்பூசி போடப்பட்ட பயணிகளும் தங்கள் பயணங்களுக்கு முன்னதாக PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, பயணிகள் QR குறியீட்டைக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
தடுப்பூசி போடப்படாத நபர்கள் தங்கள் பயணத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாக செல்லுபடியாகும் PCR சோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது தடுப்பூசி போடப்படாதவர்கள், பயணத் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் கொரோனா நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டதற்கான சான்றிதழை வழங்கலாம்.
அபுதாபி செல்லும் சர்வதேச பயணிகளுக்கு எதிஹாட் ஏர்வேஸ் வெளியிட்ட அறிவிப்பில் இனி அபுதாபி பயணிப்பதற்கு முன் PCR சோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை என்றும் அவர்கள் அபுதாபி வந்தவுடன் இலவசமாக PCR சோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.