UAE: கொரோனா பரவலை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விதிவிலக்குகளை ரத்து செய்த அமீரக அரசு..!!
கொரோனா தொற்றுநோய் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விதிவிலக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அரசு மனித வளங்களுக்கான மத்திய ஆணையம் தற்பொழுது அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊழியர்களை அவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்திருந்த முடிவும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஊழியர்கள் வரும் மே 16, ஞாயிற்றுக்கிழமை முதல் அலுவலகங்களுக்கு வந்து பணிபுரியலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், தொலைதூரக் கல்வியில் பயிலும் குழந்தைகளை வைத்திருக்கும் பெண் ஊழியர்கள் நடப்பு பள்ளி ஆண்டு இறுதி வரை அலுவலகங்களுக்கு வந்து பணி புரிவதில் இருந்து தொடர்ந்து விலக்கு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை தடுப்பூசி பெறாத ஊழியர்கள் தங்கள் சொந்த செலவில் வாரந்தோறும் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி எடுக்காததற்கு ஏதேனும் மருத்துவ நிலை உடையவராக இருந்து, அதை ஒரு மருத்துவ அறிக்கையுடன் நிரூபித்தால் அவருக்கு மேற்கொள்ளப்படும் PCR சோதனைக்கு உண்டான செலவினை நிறுவனமே ஏற்கும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து கூட்டாட்சி அதிகாரிகளிடமும் கொரோனாவிற்கு எதிரான பாதுகாப்பு தரங்கள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்குமாறும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியினை வலியுறுத்துவதோடு, ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பெடரல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.