அமீரக செய்திகள்

நவ.13ல் தொடங்கும் துபாய் ஏர்ஷோ.. விமான சாகசங்களை இலவசமாக காண அழைப்பு.. விபரங்கள் இங்கே..!!

துபாயில் பல விமானங்கள் ஒரே இடத்தில் சாகசம் செய்யக்கூடிய நிகழ்வான மிகவும் பிரசித்தி பெற்ற ‘துபாய் ஏர்ஷோ (Dubai Air Show) எதிர்வரும் நவம்பர் 13ஆம் தேதி பிரம்மாண்டமாக துபாயில் தொடங்க உள்ளது. இந்த ஏர் ஷோவில், வானில் அங்குமிங்கும் விமானங்கள் சாகசம் செய்யும் காட்சிகளை ஸ்கைவியூ அரங்கில் நேரலையாகக் கண்டுகளிக்க குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

துபாய் ஏர்ஷோவை பார்வையிடுவதற்கான ஸ்கைவியூ அரங்கானது நவம்பர் 13 முதல் 17 வரை மதியம் 1 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும் என்றும், அதில் உள்ள கிராண்ட்ஸ்டாண்ட் அரங்கிலிருந்து பொது மக்கள் ஏர்ஷோவை இலவசமாக கண்டுகளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் முக்கிய ஏர்ஷோ கண்காட்சி அரங்கத்தில் இலவச அனுமதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், துபாய் வேர்ல்ட் சென்ட்ரலில் (DWC) நவம்பர் 17 வரை நடைபெறும் இந்த கண்காட்சியை அனைவரும் இலவசமாகப் பார்த்து ரசிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் விமானிகள் மற்றும் விண்வெளி வீரர்களை சந்திக்கும் வாய்ப்புகள், இராணுவ இசைக்குழுக்கள் மற்றும் நேரடி DJக்களின் நேரடி நிகழ்ச்சிகளையும் இங்கே அனுபவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை துபாயில் நடத்தப்படும் இந்த விமானக் கண்காட்சியில் உலகின் மிகச்சிறந்த விமானிகள் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் வானில் அதிநவீன இராணுவ விமானங்கள், ஆடம்பரமான தனியார் விமானங்கள் மற்றும் மிகவும் மரியாதைக்குரிய சில வணிக விமானங்களில் பறந்து சாகசம் செய்வார்கள்.

இதில் இத்தாலியின் ஏரோபாட்டிக் டிஸ்ப்ளே டீம் ஃப்ரெஸ் டிரிகோலோரி (Frecce Tricolori), அமீரக விமானப்படையின் ஏரோபாட்டிக் டிஸ்ப்ளே டீம் ஃபர்சன் அல் எமராத் (Fursan Al Emarat), இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் விமான காட்சி குழுவான சாரங் (sarang) மற்றும் சீன விமானப்படையின் ஏரோபாட்டிக் காட்சிக் குழு போன்ற பறக்கும் அணிகள் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏர்ஷோவை இலவசமாகப் பார்ப்பது எப்படி?

ஸ்கைவியூ அரங்கில் விமானக் கண்காட்சிகளைப் பார்க்க விரும்பும் பார்வையாளர்கள் முதலில் வரவேண்டும். ஏனெனில், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைகள் உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். மேலும் பார்க்கிங் வசதியும் இங்கு குறைவாகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்கைவியூ அரங்கிற்கு எப்படி செல்வது?

குறைவான பார்க்கிங் வசதி மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, குடியிருப்பாளர்கள் மெட்ரோ மற்றும் இலவச ஷட்டில் பேருந்துகளைப் பயன்படுத்த பார்வையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த சேவை துபாய் மெட்ரோவின் ரெட் லைனில் உள்ள Ibn Battuta மெட்ரோ நிலையத்திலிருந்து துபாய் ஏர்ஷோ தளத்திற்கு இயக்கப்படும்.

முதல் ஷட்டில் பேருந்து காலை 11 மணிக்கு இப்னு பதூதா மெட்ரோ நிலையத்தில் இருந்து ஸ்கைவியூவிற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து இப்னு பதூதா மெட்ரோ நிலையித்திற்கு கடைசி பேருந்து மாலை 7 மணிக்கு புறப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!