துபாயில் படிக்கும் பள்ளி மாணவருக்கு கொரோனா வைரஸ்?? – அதிர்ச்சியில் மாணவர்கள்!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் செயல்படும் ஒரு இந்திய பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என துபாய் சுகாதார ஆணையம்(Dubai Health Authority) தெரிவித்துள்ளது.
நோய்த்தொற்றானது மாணவரின் பெற்றோரிடமிருந்து பரவி இருப்பதாகத் தெரிகிறது. மாணவரின் பெற்றோர் சமீபத்தில் வெளிநாட்டிற்கு பயணம் சென்று வந்ததாகவும், மீண்டும் துபாய்க்கு வந்த 5 நாட்களில் பெற்றோருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதாகவும் தெரிகிறது. அவரைத்தொடர்ந்து அந்த மாணவருக்கும் பெற்றோரின் மூலமாக நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. தற்பொழுது அந்த மாணவரும் பெற்றோரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவர் படிக்கும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் இருக்கிறதா என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பள்ளியின் அனைத்து மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக DHA அதிகளவிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனையொட்டி, அந்த பள்ளியில் வகுப்புகள் செயல்பட தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும், கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில், சர்வதேச சிறந்த நடைமுறைகளின்படி பள்ளி சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.
DHA உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளின்படி இந்த நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க சுகாதார அமைச்சகம், பிற அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் ஒருங்கிணைந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அனைவரின் முயற்சிகளும் வெற்றியடைந்து கொரோனாவின் பிடியிலிருந்து உலகம் விரைவில் மீண்டுவிடும் என நம்புவோமாக!