அமீரக செய்திகள்

ஷார்ஜாவிலிருந்து மதுரை, கோவை, திருச்சி செல்லும் விமான டிக்கெட் முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும்..!! துணை தூதரகம் அறிவிப்பு..!!

வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்ட நடவடிக்கையில் இரு தினங்களுக்கு முன்பு தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இணைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த விமான பயணத்திற்கான டிக்கெட் விற்பனை இன்று மாலை 4 மணி முதல் தொடங்கும் என இந்திய துணை தூரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜூலை 9 முதல் 14 வரையிலான நாட்களில் இந்தியாவிற்கு செல்ல கூடுதலாக இணைக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள், ஷார்ஜாவிலிருந்து தமிழகத்தில் உள்ள மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கும், கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மற்றும் கொச்சி விமான நிலையத்திற்கும் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் விமான நிலையத்திற்கும் செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இந்திய துணை தூதரகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, “இந்திய தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தின் இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்தியர்கள், பயணத்திற்கு தேவையான நிபந்தனைகளை பூர்த்திசெய்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முன்பதிவு அலுவலகங்கள் மூலமாகவோ அல்லது www.airindiaexpress.in என்ற இணையதளத்திலோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்” என தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு அனுப்பியிருந்த சுற்றறிக்கையில், இந்தியா செல்லவிருக்கும் பயணிகள் நேரடியாக டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தாலும்,  தூதரகத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!