UAE: கொரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய அதிநவீன ஸ்கேனர்கள்..!! எல்லைப் பகுதி, பொது இடங்களில் பயன்படுத்தப்படும் என அபுதாபி அறிவிப்பு..!!
கொரோனா நோய்த்தொற்றின் சாத்தியக்கூறுகளை உடனடியாகக் கண்டறிய, நியமிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியான மேம்பட்ட ஸ்கேனர்களை அபுதாபி அறிமுகப்படுத்தியுள்ளது.
அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவுகள் குழு இந்த ஸ்கேனர்களை அபுதாபியின் எல்லைப் பகுதிகளில் அபுதாபிக்குள் நுழைவதற்கும், யாஸ் தீவில் உள்ள சில பொது இடங்களின் நுழைவாயிலிலும், முசாஃபா பகுதிக்குள் நுழைய அல்லது வெளியேற நியமிக்கப்பட்ட பகுதிகளிலும் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
ஸ்கேனர் மூலம் ஒரு நபர் நோய்த்தொற்றுடையவராக அடையாளம் காணப்பட்டால், அவர் 24 மணி நேரத்திற்குள் இலவச PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
அபுதாபி ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்கேனர்கள் ஏற்கனவே இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்தும் மற்றும் தற்போதுள்ள கொரோனாவிற்கான நெறிமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கேனர்கள் அதிகளவு மக்களுக்கு மேற்கொள்ளும் ஸ்க்ரீனிங் நோக்கங்களுக்காக பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஸ்கேனர் ஒரு நபரை நோய்த்தொற்று பாதிக்கவில்லை என அடையாளம் கண்டால், அவர் குறிப்பிட்ட பகுதியில் இருந்து உள் நுழைய அனுமதிக்கப்படுவார். அதே நேரத்தில், இந்த ஸ்கேனர் ஒரு நபரை நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவராக கண்டறிந்தால், அதனைத் தொடர்ந்து அவர் அடுத்த 24 மணி நேரத்திற்குள் PCR சோதனை மேற்கொள்ள வேண்டும். இந்த சோதனை இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
كيف تعمل تقنيات #المسح الجديدة في #أبوظبي؟#برق_الإمارات pic.twitter.com/zhXiv606v9
— برق الإمارات (@UAE_BARQ) June 16, 2021
கடந்த ஆண்டு, அபுதாபியின் எல்லைப் பகுதியில் கொரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய விரைவில் முடிவுகளைத் தரும் DPI சோதனையைப் பயன்படுத்த அபுதாபி அரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.