அமீரகத்திலிருந்து இந்தியா பயணிக்க PCR தேவையில்லை என்ற தளர்வில் மாற்றம்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!!
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு பயணிக்கும் பயணிகளில் இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு பயணத்திற்கு முந்தைய PCR தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் எந்த ஒரு இடத்திற்கும் புறப்படும் பயணிகள் PCR பரிசோதனை முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இன்று திங்கள்கிழமை (பிப்ரவரி 21) தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று, இந்தியாவில் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்ட பயணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு முன் PCR சோதனை முடிவுகளை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்திருந்தது.
இருப்பினும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்திருந்த இந்த தளர்வானது அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் பயணிகளுக்கு பொருந்தாது என்றும், பயணம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் கொரோனாவிற்கான PCR பரிசோதனை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் விமான நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இது குறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து பயணிகளும் 72 மணி நேரத்திற்குள் RT-PCR சோதனைக்கான அறிக்கையை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது. இந்த உத்தரவானது அபுதாபியின் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் பின்பற்றும் நெறிமுறைக்கு ஏற்ப பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கான PCR சோதனை முடிவுகள் குறித்து எதிஹாட் ஏர்வேஸ் வெளியிட்டிருந்த அறிவிப்பில் “நீங்கள் பயணிக்கும் நாட்டிற்கு ஒரு PCR சோதனை முடிவு தேவை இல்லை என்றாலும், எதிஹாட் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்க நீங்கள் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.