UAE: இலவச PCR சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் அபுதாபி..!! தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை..!!
அமீரகத்தில் கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்து நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக வீடு வீடாக சென்று இலவச சோதனையை மேற்கொண்டு வந்தது அபுதாபி சுகாதாரத்துறை. அபுதாபியில் நோயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும். நோய்த்தொற்று பரவ ஆரம்பித்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் இந்த செயல்முறையானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழுவின் உத்தரவுகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், அபுதாபி காவல்துறை மற்றும் தமவ் ஹெல்த்கேர் ஆகியவற்றுடன் இணைந்து, பொது சுகாதாரத்தை பராமரிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக அல் ஷம்காவில் கொரோனாவிற்கான இலவச சோதனை தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி அரசு ஊடக அலுவலகம் வெளியிட்ட ஒரு வீடியோவில், அல் ஷம்காவின் புறநகர் பகுதியில் நடைபெற்று வரும் செயல்திறன்மிக்க ஸக்ரீனிங் செயல்முறையின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
2020 ஆம் ஆண்டில் கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து, தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியாக கொரோனா சோதனை, பாதித்தவருடன் தொடர்புள்ளவர்களைக் கண்டறிதல் மற்றும் நேர்மறை நோயாளிகளை தனிமைப்படுத்துதல் ஆகியவற்றில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இத்தகைய முயற்சிகள் நாட்டிலும் உலகெங்கிலும் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புதிய வகைகள் பரவலின் போது அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.
இதனால் பல்வேறு இடங்களில் இலவச சோதனை வசதிகள் கிடைப்பதற்கு வழிவகை செய்த அபுதாபி அரசை குடியிருப்பாளர்கள் பாராட்டி வருகின்றனர். அதிலும் தொழிலாளர்களின் நலனுக்காக இரவு நேரங்கள் வரையிலும் இது தொடர்கிறது.
“இலவச சோதனை சேவைகள் ஒவ்வொரு நாளும் பல இடங்களில் மற்றும் வேலை நேரத்திற்குப் பிறகு ஊழியர்களுக்கு வசதியான நேரங்களில் கிடைக்கின்றன, இது எங்களுக்கு ஒரு சிறந்த செய்தி” என்று குடியிருப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
கொரோனா சோதனைக்காக அமைக்கப்பட்டிருக்கும் மொபைல் ஸ்க்ரீனிங் சென்டர், சோதனை மையங்கள் மற்றும் அபுதாபியின் பல்வேறு பகுதிகளில் எழுப்பப்பட்ட கூடாரங்கள் மூலம் ஸ்க்ரீனிங் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.