தோஃபர் கவர்னரேட்டில் விதிக்கப்பட்டிருக்கும் லாக்டவுன் தொடர்ந்து நீடிக்கும்..!! சுகாதார அமைச்சர் தகவல்..!!
ஓமானின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும் தோஃபர் கவர்னரேட்டில் (Dhofar Governorate) லாக்டவுன் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேறவும், வெளியில் இருந்து அப்பகுதிக்கு மக்கள் நுழையவும் சில நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுகாதார அமைச்சர் கூறுகையில், “தோஃபர் பகுதியில் விதிக்கப்பட்டிருக்கும் லாக்டவுன் நீக்கப்பட்டால் நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் சுகாதார ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். எனவே, தோஃபர் பகுதியில் லாக்டவுன் தொடர்ந்து நீடிக்கும். சரியான தருணம் வரும் போது லாக்டவுன் நீக்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ஓமானில் கடந்த ஆகஸ்ட் 7 ம் தேதி நாடு முழுவதுமான லாக்டவுன் நீக்கப்பட்டு, தோஃபர் பகுதியில் மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை லாக்டவுன் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.
தோஃபர் மற்றும் மசிரா தீவு (Masirah island), துக்ம் (Duqm), ஜபல் அக்தர் (Jabal Akhdar) மற்றும் ஜபல் ஷம்ஸ்(Jabal Shams) ஆகிய இடங்களில் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. தற்பொழுது ஓமான் நாட்டிலேயே தோஃபர் கவர்னரேட்டில் மட்டுமே லாக்டவுன் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.