அமீரகத்தின் தேசிய தின விடுமுறையில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம்..!! போலீஸ் ரோந்து வாகனத்தில் கண்காணிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினம் (National Day) நாளை மறுநாள் டிசம்பர் 2 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடவிருப்பதால், பொதுமக்கள் அனைவரும் கோவிட் -19 தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க உரிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்று துபாய் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
துபாய் காவல்துறையின் போக்குவரத்துத் துறை இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய், அமீரகத்தில் வசிக்கும் அனைவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பான சமூக இடைவெளியை உறுதிசெய்து எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அமீரக அரசு வகுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் பாதுகாப்பு மற்றும் சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக போலீஸ் ரோந்து வாகனங்கள் (Police Patrols) முழு வீச்சில் செயல்படும் என்றும் துபாயின் முக்கிய பகுதிகளான டவுன்டவுன் துபாய் (Downtown Dubai), ஜுமைரா பீச் ரெசிடென்ஸ் (Jumeirah Beach Residence), லா மெர் (La Mer ) மற்றும் ஃபெஸ்டிவல் சிட்டி (Festival City) போன்ற சுற்றுலா தலங்களில் காவல் துறை அதிகாரிகள் பணியில் இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று தேசிய தின விடுமுறைக்கு மத்தியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், பொது இடங்களில் மக்களின் கூட்டங்களைத் தடுக்கவும் நகரம் முழுவதும் 180 க்கும் மேற்பட்ட ரோந்து வாகனங்கள் பணியில் நிறுத்தப்படும் என்று ஷார்ஜா காவல்துறையும் முன்பு கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் அமீரகம் முழுவதும் தேசிய தின கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் கொரோனாவின் காரணமாக பொது நிகழ்வுகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும் கட்டுப்பாடுகளை அமீரக அரசு விதித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஒரு உயர் அரசாங்க அதிகாரி குடியிருப்பாளர்களுக்கு கடுமையான கோவிட் -19 பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்ந்து இருக்கும் என்றும் கொண்டாட்டங்கள் விர்ச்சுவல் எனும் இணைய வழி வாயிலாக நடத்தப்பட வேண்டும் என்றும் நினைவுபடுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.