UAE: 10 வருடங்களாக பிரிந்திருந்த குடும்பத்தை ஒன்று சேர்த்த துபாய் காவல்துறை.. துபாய் ஏர்போர்ட்டில் நடந்த உணர்ச்சிகரமான சம்பவம்…!!
அமீரகத்தில் 10 ஆண்டு காலமாக தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் நபரின் ஆசையை நிறைவேற்றி அவரை குடும்பத்துடன் ஒன்று சேர்த்து ஒரு உணர்ச்சிகரமான சம்பவத்திற்கு வித்திட்டுள்ளனர் துபாய் காவல்துறையினர்.
ஒரு சில நாட்களுக்கு முன் ஆசிய வெளிநாட்டவர் துபாய் காவல்துறையிடம் தான் அமீரகத்தில் 10 ஆண்டுகளாக வசித்து வருவதாகவும் இதுவரையிலும் குடும்பத்தை சென்று பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளர். மேலும் அவரது மனைவி மற்றும் மகள் டிரான்ஸிட் விமானத்தில் துபாய் வழியாக பயணிக்க இருப்பதாகவும் அவர்களை தான் காண விரும்புவதாகவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை அறிந்து கொண்ட துபாய் காவல்துறையினர் அவர்கள் சந்திப்பிற்கு அனுமதி அளித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு பொதுத் துறையின் இயக்குநரான மேஜர் ஜெனரல் அலி அதீக் பின் லஹேஜ் கூறுகையில், “அவர் சில தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக 10 ஆண்டுகளாக குடும்பத்தை சந்திக்கவில்லை என்று எங்களுக்கு விளக்கினார். நீண்ட பிரிவிற்குப் பிறகு தனது குடும்பத்தை பார்க்க விரும்புவதாகவும் அதற்கு துபாய் காவல்துறை ஆதரவளிக்கும் என்று நம்புவதாகவும் எங்களிடம் தெரிவித்தார்” என்று கூறியுள்ளார்.
அத்துடன் “நாங்கள் அந்த நபரின் கோரிக்கைக்கு பதிலளித்து, விமான நிலையத்தின் டிரான்ஸிட் பகுதியில் குடும்பம் ஒன்று கூடுவதற்குத் தேவையான அனைத்து நடைமுறைகளையும் கையாண்டோம்” என்றும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு கோரிக்கை விடுத்த குடியிருப்பாளர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மனைவி மற்றும் மகளை விமான நிலைய டிரான்ஸிட் பகுதியில் சந்தித்துள்ளார்.
தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றியதற்காக துபாய் காவல்துறைக்கு குடியிருப்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.