எக்ஸ்போ 2020 செல்ல இனி வாரம் முழுவதும் ஒரு நாள் பாஸ் 45 திர்ஹம்ஸ் மட்டுமே.. Smart Queue முன்பதிவுக்கும் அனுமதி..!!
துபாயில் கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ம் தேதி முதல் தொடங்கி தற்போது வரை நடைபெற்றுவரும் எக்ஸ்போ 2020 துபாய் முடிய இன்னும் இரு மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ளது. இந்நிலையில் வாரநாட்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த ஒரு நாள் நுழைவு அனுமதிக்கான கட்டணம், இனி வார இறுதி நாட்களுக்கும் பொருந்தும் என்று எக்ஸ்போ 2020 அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
எக்ஸ்போ 2020 துபாய் தொடங்கிய போது ஒரு நாள் நுழைவு அனுமதிக்கான கட்டணமாக ஒரு நபருக்கு 95 திர்ஹம்ஸ் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நாள் நுழைவுக்கான கட்டணம் 95 திர்ஹம்சிலிருந்து 45 திர்ஹம்சாக அதிரடியாக குறைக்கப்பட்டது. எனினும் இந்த தள்ளுபடியானது திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, இனி வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை தினங்களிலும் 18 முதல் 59 வயதுக்குட்பட்ட பார்வையாளர்கள், ஒரு நாள் நுழைவு அனுமதிக்கான 45 திர்ஹம்ஸ் கட்டணத்தில் எக்ஸ்போ 2020 தளத்தை சென்று பார்வையிடலாம். அதே போன்று இதற்கு முன்னதாக வரம்பில்லாமல் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சென்று பார்வையிடுவதற்கான சீசன் பாஸின் கட்டணமானது கடைசி மூன்று மாதங்களுக்காக 495 திர்ஹம்சிலிருந்து 195 திர்ஹம்சாக குறைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஒரு நாள் நுழைவு அனுமதிக்கான எக்ஸ்போ 2020 டிக்கெட் வைத்திருக்கும் பார்வையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும், தங்களுக்கு பிடித்தமான பெவிலியன்களுக்கு நேராக சென்று பார்வையிடமும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஸ்மார்ட் வரிசை (smart queue) மூலமாக 10 முன்பதிவுகளை செய்துகொள்ளலாம் எனவும் எக்ஸ்போ அமைப்பினர் கூறியுள்ளனர்.
கடந்த அக்டோபர் 1, 2021 ம் தேதி அன்று திறக்கப்பட்டதிலிருந்து இம்மாதம் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை எக்ஸ்போ 2020 துபாய் தளத்தை 11 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளதாகவும் எக்ஸ்போ 2020 துபாய் அமைப்பானது தெரிவித்துள்ளது.