துபாய்: சட்டவிரோதமாக என்ஜின்களை மாற்றியமைத்த 1,000 வாகனங்கள் பறிமுதல்..!! 1000 திர்ஹம் அபராதம், 12 கரும்புள்ளிகள் மற்றும் 30 நாட்கள் சிறை தண்டனை அறிவித்த காவல்துறை..!!
வாகனங்களில் சட்டவிரோதமாக ஸ்பீட் பூஸ்டர்களைக் கொண்ட 1,097 வாகனங்களை துபாய் காவல்துறையினர் தற்பொழுது பறிமுதல் செய்துள்ளனர். இந்த நடவடிக்கையானது கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி தொடங்கிய சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களுக்கு எதிரான காவல்துறை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பிரச்சாரமானது கூடுதல் வேகமாகவும் இரைச்சலுடனும் ஓட்டுவதற்கு மாற்றியமைக்கப்பட்ட என்ஜின்களை கொண்ட வாகனங்களை கண்டறிவதே நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இந்த விதிமீறலில் ஈடுபட்டவர்கள் ஒன்பது வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இது போன்ற மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களில் வாகனத்தின் அசல் விவரக்குறிப்புகளானது (specifications) என்ஜின் திறனுடன் பொருந்தாததால், ஓட்டுநர்கள் பெரும்பாலும் இத்தகைய வாகனங்கள் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறார்கள் என்று போக்குவரத்து காவல்துறை பொதுத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் அவர்கள் கூறியுள்ளார்.
இத்தகைய வாகனங்கள் ஓட்டுவது ஆபத்தானவை என்றும், இதற்கு முன்னர் ஆபத்தான விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்டால் அபராதமாக 1,000 திர்ஹம், 12 கரும்புள்ளிகள் (Black Points) மற்றும் 30 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் ஜுமேரா தெருவில் 994 வாகனங்களும், அல் வாஸ்ல் ஸ்ட்ரீட்டில் 79 வாகனங்களும், 2nd டிசம்பர் ஸ்ட்ரீட்டில் 21 வாகனங்களும் ஜபீல் ஸ்ட்ரீட்டில் 3 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக பர்துபாய் காவல் நிலைய இயக்குநர் பிரிகேடியர் அப்துல்லா காதிம் சோரூர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், சாலை பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பு என்றும் நாம் அனைவரும் ஒன்றாக முயற்சித்து சாலைகளின் பாதுகாப்பை பராமரிக்க வேண்டும். என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.