அமீரகத்தில் பயன்பாட்டுக்கு வரும் 3-வது Covid19 தடுப்பூசி..!! ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசி அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கு எதிராக இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில், தற்பொழுது மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்பூட்னிக் V கோவிட் -19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) இன்று அறிவித்துள்ளது.
அமீரகத்தின் தேசிய அவசரநிலைகள், நெருக்கடி மற்றும் பேரழிவுகள் மேலாண்மை ஆணையம் (NCEMA), குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் விரிவான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவிக்கையில், “வைரஸுக்கு எதிரான அதிகரித்த தடுப்பு நிலைகளை உறுதி செய்வதற்கும், நாட்டின் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் அதன் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக அவசரகால பயன்பாட்டிற்காக ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசியை ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகரிக்கிறது” என்று கூறியுள்ளது.
ஸ்பூட்னிக் தடுப்பூசி ரஷ்ய சுகாதார அமைச்சின் கமலேயா தேசிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத்தால் (Russian Ministry of Health’s Gamaleya National Research Institute of Epidemiology and Microbiology) உருவாக்கப்பட்டது, மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்பட்டது.
இதற்கு முன்னர் சீனாவை சேர்ந்த சினோபார்ம் தடுப்பூசிக்கும் மற்றும் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிக்கும் ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் அளித்து தற்பொழுது இந்த இரண்டு தடுப்பூசிகளும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.