துபாய்: ரமலான் மாதத்தில் பிச்சை எடுத்து 40,000 திர்ஹம்ஸ் சம்பாதித்த வெளிநாட்டவர்.. கைது செய்த துபாய் காவல்துறை..!!
புனித ரமலான் மாதத்தில் குடியிருப்பாளர்களின் பெருந்தன்மையை பயன்படுத்தி பிறரிடம் பிச்சை எடுப்பதன் மூலம் 40,000 திர்ஹம் (இந்திய ரூபாய் மதிப்பில் 8 லட்சம் ) சம்பாதித்த ஒருவரை துபாய் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் இருந்ததாகவும், ரமலான் மாதத்தின் முதல் சில நாக்ட்களிலேயே இந்த பணத்தை சேர்த்ததாகவும் துபாய் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
துபாயில் பிச்சை எடுப்பதற்கு எதிரான இயக்கத்தின் ஒரு பகுதியாக, கடந்த மாதம் மார்ச் 18 முதல் ரமலான் மாதத்தின் முதல் நாள் வரை 178 பிச்சைக்காரர்களை கைது செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய செயல் பிச்சை எடுப்பதற்கு எதிரான 2018 இன் மத்திய சட்ட எண். 9 ன் படி, சட்டவிரோதமானது மற்றும் தண்டனைக்குரியது என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், புனித மாதத்தில் பிச்சைக்காரர்களின் வருகையை ஐக்கிய அரபு அமீராம் காண்கிறது. பிச்சை எடுப்பதை கூட்டாக தொழில்முறையாக செயல்படுத்துபவர்கள் அல்லது பிச்சை எடுப்பதற்காக வெளிநாட்டிலிருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு ஆறு மாதங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 100,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும் பிச்சை எடுப்பது நமது சமூகத்தின்mபாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. பிச்சை எடுக்கும் செயலானது திருட்டு மற்றும் பிக்பாக்கெட்டுடன் தொடர்புடையது என்பதால் இந்த விஷயத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். துபாய் போலீஸ் ஆப் வாயிலாகவோ அல்லது 901 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அழைத்தோ பிச்சைக்காரர்களைப் பற்றி புகார் செய்யுமாறு பொதுமக்களையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை ரமலான் மாதத்தில் பிச்சை எடுப்பவர்களை அதிகமாக காண முடியும். இதனை தடுக்கும் விதமாக அமீரக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. மேலும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களையும் இது போன்ற அனுமதிக்கப்படாத செயல்களில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்க வேண்டாம் எனவும், அவர்கள் குறித்து காவல்துறைக்கு தெரிவிக்குமாறும் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.