UAE: பொது இடங்களுக்குள் நுழைய தடுப்பூசி போட்டிருந்தால் மட்டும் போதாது..!! புதிய நெறிமுறைகளை வெளியிட்ட அபுதாபி..!!
அபுதாபியில் வரும் ஆகஸ்ட் 20 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் தடுப்பூசி போட்டவர்களே பொது இடங்களுக்குள் அனுமதி என்ற நடவடிக்கைக்கான புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகளை அபுதாபியின் அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸினை பெற்று 6 மாதம் கடந்தவர்கள் அல்ஹோஸன் அப்ளிகேஷனில் தங்கள் தடுப்பூசி நிலையை தக்க வைத்துக் கொள்ள கண்டிப்பாக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 20 அன்று அல்ஹோஸன் அப்ளிகேஷனில் அவர்களுக்கு கிரே ஸ்டேடஸாக (grey status) மாறுவதற்கு முன்பு, 6 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ள 30 நாட்கள் சலுகைக் காலம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி சோதனைகளில் பங்கேற்றவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு சனிக்கிழமை பொது இடங்களுக்கான நுழைவு செயல்முறையில் இந்த புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் ஆகஸ்ட் 20 வெள்ளிக்கிழமை முதல் தடுப்பூசி போடப்பட்ட குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளில் அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் ‘கிரீன் ஸ்டேடஸ்’ கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும்.
இந்த நிலையானது PCR சோதனைக்கான எதிர்மறை முடிவு வந்ததில் இருந்து 30 நாட்கள் இருக்கும்.
மேலும் அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் ஸ்டேடஸ் கொண்ட தடுப்பூசியிலிருந்து விலக்கு பெற்றவர்களுக்கும் பொது இடங்களுக்கு நுழைய அனுமதிக்கப்படுகிறது. இந்த கிரீன் ஸ்டேடஸ் PCR சோதனை முடிவு வந்ததில் இருந்து ஏழு நாட்களுக்கு இருக்கும்.
அதே போல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் தானாகவே கிரீன் ஸ்டேடஸைக் கொண்டிருக்கும். இவர்களும் பொது இடங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனில் காலாவதியான PCR சோதனை முடிவை வைத்திருந்து கிரே ஸ்டேடஸ் கொண்டிருப்பவர்கள் மற்றும் தடுப்பூசி போடாமல் கிரே ஸ்டேடஸ் கொண்டவர்கள் இந்த பொது இடங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் புதிய ரெசிடென்ஸ் அனுமதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட 60 நாட்கள் அவகாசம் உண்டு என்றும் குழு அறிவித்தது.
பொது இடங்களில் நுழைவதற்கான செயல்முறை விசிட்டர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும், அவர்கள் சர்வதேச பயண நெறிமுறையையும் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம், அதிகாரிகள் அபுதாபியில் உள்ள ஷாப்பிங் சென்டர்கள், உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் ஷாப்பிங் சென்டருக்குள் இல்லாத மற்ற சில்லறை விற்பனை நிலையங்கள், ஜிம்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள், சுகாதார கிளப்புகள், ரிசார்ட்ஸ், அருங்காட்சியகங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் தீம் பார்க் ஆகிய பொது இடங்களில் நுழைவதற்கு தடுப்பூசி போடப்பட்டு அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் ஸ்டேடஸ் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பட்டியலில் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அபுதாபியில் உள்ள குழந்தைகள் நர்சரிகள் ஆகியவையும் அடங்கும்.
வைரஸின் பரவல் மற்றும் அதன் புதிய வகைகளை கட்டுப்படுத்த அபுதாபியின் முன்கூட்டிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும், தடுப்பூசி போடுவதைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தையும் இந்தக் குழு பொதுமக்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.