UAE: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை இலவசமாக மாற்றி கொள்ள சிறப்பு முகாம்.. இந்திய தூதரகம் அறிவிப்பு..!!
கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் தொலைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளை வைத்திருக்கும் இந்தியர்கள் இலவசமாக பாஸ்போர்ட்டை மாற்றிக் கொள்ளலாம் என்று துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த மாதம் பெய்த மிக அதிகமான மழையைத் தொடர்ந்து, ஜூலை கடைசி வாரத்தில் ஃபுஜைரா, ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்த வெள்ளத்தில் குறைந்தது ஏழு வெளிநாட்டினர் இறந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் மற்றும் பொருட்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து துபாயில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தனர்.
சிறப்பு முகாம்
இந்தியச் சங்கங்கள் மற்றும் சமூக தன்னார்வத் தொண்டர்கள் பல இந்திய வெளிநாட்டவர்கள் பாஸ்போர்ட் உள்ளிட்ட தங்கள் உடைமைகளுக்கு சேதம் விளைவித்ததாகப் புகாரளித்ததை அடுத்து, ஆகஸ்ட் 7, ஞாயிற்றுக்கிழமை, ஃபுஜைரா மற்றும் கல்பாவில் வசிப்பவர்களுக்காக சிறப்பு பாஸ்போர்ட் சேவை (சேவை) முகாமையும் துணைத் தூதரகம் நடத்தியது. இது குறித்து தெரிவிக்கையில், “வெள்ளத்தின் போது பாஸ்போர்ட் சேதமடைந்த அல்லது தொலைந்து போன இந்திய நாட்டினருக்கு வசதியாக இந்த முகாம் நடத்தப்பட்டது” என்று துணைதூதரக பாஸ்போர்ட், கல்வி மற்றும் சான்றளிப்பு அதிகாரி ராம்குமார் தங்கராஜ் கூறியுள்ளார். அத்துடன் இதுவரை 83 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் தூதரக அதிகாரி வியாழனன்று தெரிவித்திருந்தார்.
மேலும் “சேதமடைந்த அல்லது தொலைந்து போன பாஸ்போர்ட்டுகளுக்கான விண்ணப்பங்கள் இலவச அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற விண்ணப்பங்களை ஆகஸ்ட் 28-ம் தேதி வரை தொடர்ந்து ஏற்றுக்கொள்வோம்’’ என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், காணாமல் போன தனது பாஸ்போர்ட் சேதத்தின் உண்மைத்தன்மையை சரிபார்க்க தேவையான சோதனைகள் செய்யப்படுவதாகவும், பாஸ்போர்ட்டை இழந்தவர்கள் போலீஸ் அறிக்கையையும் பெற வேண்டும் என்றும் தங்கராஜ் கூறியுள்ளார். அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டவுடன், மாற்றப்பட்ட பாஸ்போர்ட்டுகளை விண்ணப்பதாரர்கள் இரண்டு நாட்களில் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் இன்னும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காதவர்கள், இந்திய பாஸ்போர்ட் விண்ணப்பங்களைச் செயலாக்கும் அவுட்சோர்ஸ் ஏஜென்சியான BLS இன்டர்நேஷனல் சர்வீசஸின் கிளைகளில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்கலாம் என்றும் அவர்கள் (வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள்) காரணத்தை சுட்டிக்காட்டி ஒரு சிறப்பு கோரிக்கையை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.