இந்தியா, இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளில் இருந்து அமீரகத்திற்கு வர மறு அறிவிப்பு வரும் வரை தடை..!! GCAA சுற்றறிக்கை..!!
இந்தியா, இலங்கை உட்பட மொத்தம் 16 நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உள்வரும் பயணிகள் விமான சேவையானது மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்படும் என்று அமீரகத்தின் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (GCAA) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், காங்கோ ஜனநாயக குடியரசு, இந்தோனேசியா, லைபீரியா, நமீபியா, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், உகாண்டா, சியரா லியோன், தென்னாப்பிரிக்கா, வியட்நாம் மற்றும் சாம்பியா ஆகிய நாடுகள் இந்த தடையில் அடங்கும்.
ஜூலை 18, ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு புதிய பாதுகாப்பு முடிவு சுற்றறிக்கையில் முன்னர் வழங்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளில் கொண்ட நிலையை GCAA தற்பொழுதும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசுப்பிரதிநிதிகள் மற்றும் மருத்துவ அவசரநிலைகளால் பாதிக்கப்படுபவர்கள் உள்ளிட்ட விலக்கு பெற்றவர்கள் தவிர மற்ற அனைவருக்கும் GCAA அமீரகம் வர தடைவிதித்துள்ளது.
தற்பொழுது வெளியான சுற்றறிக்கையில், “கொரோனா தொற்றுநோயின் தற்போதைய நிலையானது ஐக்கிய அரபு அமீரகத்தி்ற்கு புதிய விமானம் மற்றும் பயணிகளுக்கு பயண கட்டுப்பாடுகளை விதிக்க வழிவகுக்கிறது. ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. அதன் அடிப்படையில் மேலும் தேவையான புதுப்பிப்புகள் மற்றும் வழிமுறைகள் வழங்கப்படும் ” என கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள், அரசுப்பிரதிநிதிகள், கோல்டன் மற்றும் சில்வர் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அமீரகத்திற்குள் நுழைவதற்கு அனுமதிப்பது உட்பட முன்னர் வெளியிடப்பட்ட பல பயண நெறிமுறைகளை இந்த சுற்றறிக்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
GCAA-வின் இந்த சுற்றறிக்கையால் அமீரகம் திரும்ப வேண்டி காத்துக்கிடக்கும் பலரும் ஏமாற்றமே அடைகின்றனர். அமீரகத்திற்கு வருவதற்கான தடையை நீக்கி விமான சேவை மீண்டும் விரைவில் துவங்கப்பட வேண்டும் என்பதே பலருடைய எண்ணமாக உள்ளது.