UAE : அக்டோபர் 25 க்குப் பிறகு இயக்கப்படும் விமானங்களுக்கான முன்பதிவு துவக்கம்..!! தூதரகம் அறிவிப்பு..!!
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது வரும் அக்டோபர் 25 முதல் இந்தியாவிற்கு இயக்கப்படும் விமானங்களுக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகமானது இது குறித்த அறிவிப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், துபாயில் இருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அட்டவணையில் துபாயில் இருந்து சென்னை, மதுரை மற்றும் திருச்சிக்கு செல்லும் விமானங்களின் விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கு செல்லும் விமானங்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதால், இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்து இந்த ஆண்டு இறுதி வரையிலும் மீண்டும் துவங்கப்படாதோ என்ற கேள்வியை அனைவருக்கும் எழுப்பியுள்ளது.
தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கும் அட்டவணையில் இந்த மூன்று மாதங்களுக்கு சென்னைக்கு 9 விமானங்களும் மதுரைக்கு 7 விமானங்களும் திருச்சிக்கு இரு விமானங்களும் ஏர் இந்தியா விமான நிறுவனம் மூலம் இயக்கப்படும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த குறிப்பிட்ட விமானங்களுக்கு மட்டுமே தற்பொழுது பயணிகள் முன்பதிவு செய்ய முடியும் என்பது தெளிவாகியுள்ளது.
இனி வரக்கூடிய காலங்களில், இந்த ஆண்டு இறுதி வரைக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் திட்டத்தின் மற்ற விமானங்களுக்கான முன்பதிவு பற்றி தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அறிவிக்கப்பட்டுள்ள விமானங்களுக்கான முன்பதிவினை இன்று மதியம் முதலே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Bookings for the Vande Bharat Mission flights to India from 25 October 2020 begins at 3PM today. #VandeBharatMission pic.twitter.com/DLDTqsbift
— India in Dubai (@cgidubai) October 12, 2020