துபாய்: குறிப்பிட்ட பிரிவினருக்கு ஃபைசரின் மூன்றாவது டோஸைப் பரிந்துரைக்கும் DHA..!!
துபாய் சுகாதார ஆணையம் (DHA) சில குடியிருப்பாளர்களுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை வழங்கத் தொடங்கும் என்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
ஸ்டெம் செல் சிகிச்சை மேற்கொண்டவர்கள், மேம்பட்ட அல்லது சிகிச்சை அளிக்கப்படாத எச்.ஐ.வி நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் போன்ற குறிப்பிட்ட பிரிவினர் பைசர் பூஸ்டர் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிரிவுகளில் உள்ள நபர்கள் பூஸ்டரைப் பெற 12 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
எவ்வாறாயினும், நோயாளிகள் மூன்றாவது டோஸ் எடுப்பதற்கு முன்பு அவர்களின் மருத்துவர்களால் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி பெறுவதற்கான தகுதியை உறுதிப்படுத்த, அவர்கள் DHA வின் ஒரு குடும்ப மருத்துவரையோ அல்லது 800 342 ஐ அழைப்பதன் மூலம் ஒரு டெலிமெடிசின் ஆலோசனையையோ கோர வேண்டும்.
சர்வதேச ஆய்வுகளின்படி, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு இல்லாத நபர்கள் கொரோனா தடுப்பூசியின் கூடுதல் டோஸை இப்போதைக்கு எடுக்கத் தேவையில்லை என்று DHA தெரிவித்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில், நோயெதிர்ப்பு சக்தி தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கூட கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் தேவைப்படாது என்று ஆணையம் மேலும் கூறியுள்ளது. இருப்பினும், இது குறித்த புதுப்பிப்புகள் இருந்தால் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.