அமீரக செய்திகள்

அமீரகத்தில் செல்ஃப் டிரைவிங் வாகனங்களுக்கான உரிமத்திற்கு ஒப்புதல்..!! துபாய் ஆட்சியாளர் வெளியிட்ட அறிவிப்பு…

ஐக்கிய அரபு அமீரகம் முதல்முறையாக செல்ஃப் டிரைவிங் வாகனங்களுக்கான தேசிய உரிமத்தை அங்கீகரித்துள்ளது. இதனை முன்னிட்டு WeRide எனும் நிறுவனத்திற்கு அமீரகத்தின் சாலைகளில் ஓட்டும் செல்ஃப் டிரைவிங் வாகனங்களை சோதனை செய்வதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக அமீரக துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திங்கள்கிழமையன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஷேக் முகமது, செல்ஃப் டிரைவிங் வாகனங்களுக்கான முதல் உரிமத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், நாட்டில் உள்ள அனைத்து வகையான செல்ஃப் டிரைவிங் வாகனங்களையும் இந்த நிறுவனம் சோதிக்கத் தொடங்கும், இது நாட்டின் எதிர்கால போக்குவரத்து முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

WeRide, ஒரு தானியங்கும் (autonomous) டிரைவிங் கம்பெனி ஆகும். சீனாவின் குவாங்சோவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், அபுதாபி உட்பட பல்வேறு நகரங்களில் அதன் மையங்களை நிறுவியுள்ளது. மேலும், உலகெங்கிலும் உள்ள 26 நகரங்களில் செல்ஃப் டிரைவிங் ஆராய்ச்சி மற்றும் ஆப்பரேஷன்களை நடத்துகிறது.

இத்தகைய நிறுவனத்தில், ரோபோடாக்சிஸ், ரோபோபஸ்கள், ரோபோ வேன்கள் மற்றும் எந்த வானிலையிலும் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய ரோபோஸ்வீப்பர்கள் போன்ற தயாரிப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இ-வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள்:

செல்ஃப் டிரைவிங் வாகனங்களுக்கு மட்டுமல்லாமல் ஷேக் முகம்மது அவர்கள் மத்திய அரசின் இ-வாகனக் கொள்கைக்கும் ஒப்புதல் அளிப்பதாக அறிவித்துள்ளார். குறிப்பாக, இது நாடு முழுவதும் இ-வாகன சார்ஜிங் நெட்வொர்க்கை உருவாக்குதல், குறைந்த கார்பன் உமிழ்வு மற்றும் ஆற்றல் நுகர்வு ஆகியவற்றை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கொள்கையின் மூலம் போக்குவரத்து துறையில் சுமார் 20 சதவீதம் ஆற்றல் நுகர்வைக் குறைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!