UAE: இதயத்தில் 100% அடைப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்..!! வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த மருத்துவக் குழுவினர்..!!
இதயத்தில் 100 சதவீத அடைப்பால் பாதிக்கப்பட்ட தமிழரை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளனர் துபாய் மருத்துவ குழுவினர். தினமும் இரண்டு மணி நேரம் பேட்மிண்டன் விளையாடி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் தமிழரான ராஜ்குமார் ராஜேந்திரன் தூக்கத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குசைஸ், ஆஸ்தெர் மருத்துவமனையின் மருத்துவர்கள், அவருக்கு இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் ஐந்து தமனிகளில் கடுமையான அடைப்பு இருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர். மேலும் 41 வயதான அவருக்கு மூன்று கரோனரி தமனிகளில் கிட்டத்தட்ட 100 சதவீதம் அடைப்பு மற்றும் இரண்டு கிளை தமனிகளில் பகுதி அடைப்பு இருப்பது தெரியவந்தது.
பின்னர் செப்டம்பர் 23 அன்று மருத்துவமனையில் அவருக்கு உயிர் காக்கும் கரோனரி தமனி பைபாஸ் கிராஃப்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு இப்போது தனது வீட்டில் குணமடைந்து வரும் ராஜேந்திரன், தனக்கு இதயத்தின் தமனியில் பல அடைப்புகளைப் பற்றி மருத்துவர் சொன்னபோது தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறும் போது “நான் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்தேன், தினமும் இரண்டு மணி நேரம் எனது நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடினேன். நான் ஆரோக்கியமாகவும் இருந்தேன். கடைசியாக நான் எந்த மருந்தை உட்கொண்டேன் என்பது கூட எனக்கு நினைவில் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஆரோக்கியமாக இருந்து வந்தவருக்கு ஒரு நாள் தூக்கத்தின் போது மார்பு மற்றும் முதுகில் சிறு வலியை அனுபவித்ததாகவும் அது இரண்டு நிமிடங்கள் நீடித்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “நான் எழுந்து என் படுக்கையில் அமர்ந்தேன். பின்னர் வலி மறைந்தது. அடுத்த நாள், நான் இதைப் பற்றி என் சகோதரரிடம் பேசினேன், அவர் ஒரு மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள கிளினிக்கிற்குச் சென்றோம்” என்று ராஜேந்திரன் நினைவு கூர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு அடைப்பு கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அவர் கூறுகையில் “அறுவைசிகிச்சை நன்றாக நடந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அனுவை சிகிச்சைக்கு முன் கொஞ்சம் கவலைப்பட்டோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக, எல்லாம் நன்றாக நடந்தது. காயங்கள் குணமாகி வருகிறது, இன்னும் சிறிது காலத்தில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று நம்புகிறேன்” என்று ராஜேந்திரன் கூறியுள்ளார்.