அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 28 ம் தேதி ‘விபத்து இல்லாத நாள்’.. விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை அறிவித்துள்ள அமைச்சகம்…!!
அமீரக அரசானது, எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதியை ‘விபத்துக்கள் இல்லாத நாள் (A Day Without Accidents)’ என்ற முன்முயற்சிக்கான நாளாக நிர்ணயித்துள்ளது. இந்த பிரச்சாரத்தை உள்துறை அமைச்சகம் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து நடத்த உள்ளது.
மேலும் இந்த நாளில், போக்குவரத்து விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து குடிமக்களுக்குக் கற்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு தினத்தன்று, நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை உள்ளடக்கிய உள்ளூர் சமூகத்திற்குள் ஒற்றுமையை வளர்ப்பதற்கு இந்த பிரச்சாரம் உதவும் என்று கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சி குறித்து உள்துறை அமைச்சகத்தின் ஃபெடரல் டிராஃபிக் கவுன்சிலின் தலைவர் ஹுசைன் அகமது அல் ஹரிதி அவர்கள் கூறுகையில், ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடத்தப்படவுள்ள பிரச்சாரம், கல்வி ஆண்டு தொடக்கத்துடன் ஒத்துப்போவதாகவும், இது பொது மற்றும் தனியார் சமூகத்தின் அனைத்து துறைகளும் விபத்தில்லா மற்றும் ஆபத்துகள் இல்லாத சாலைகளை நோக்கி செயல்படும் ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, பாதுகாப்புக் கொள்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கூட விரிவான விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, இந்த வருடாந்திர பிரச்சாரம் மிகப்பெரிய வெற்றியைக் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது, கடந்த ஆண்டு இதன் மூலம் போக்குவரத்து விபத்துகளில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதுபோலவே, பிரச்சாரத்தின் நான்கு ஆண்டு கால வெற்றியின் சாதனையை ஒரு அதிகாரி வலியுறுத்தியுள்ளார், இது பொதுப் போக்குவரத்து விழிப்புணர்வை அதிகரித்ததுடன் பள்ளியின் முதல் நாளில் பள்ளி மண்டலங்களில் பூஜ்ஜிய இறப்புகள் என்ற வெற்றியையும் கண்டுள்ளது. இந்த பிரச்சாரம் விபத்து இல்லாத சாலைகளை அடைவதற்காக, அனைத்து சமூக உறுப்பினர்களிடையேயும் பொறுப்புணர்வு மற்றும் விழிப்புணர்வை உருவாக்க முயற்சிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.