UAE: புத்தம் புது பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ள மிராக்கிள் கார்டன்..!!
உலகின் மிகப்பெரிய இயற்கை மலர் தோட்டமான மிராக்கிள் கார்டன் செல்ல இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
துபாய்லாண்டின் மையப்பகுதியில் 72,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த பூங்கா பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் உணவு மற்றும் பானங்கள் விற்பனைக்கு பிரத்யேக இடத்தை வழங்குகிறது.
பாதுகாப்பான சூழலில் பார்வையாளர்கள் வேடிக்கை நிறைந்த அனுபவத்தை தொடர்ந்து பெற முடியும் என்பதை உறுதிசெய்ய கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளின் கீழ் இந்த மிராக்கிள் கார்டன் மீண்டும் திறக்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்காக 120 க்கும் மேற்பட்ட வகைகளில் 150 மில்லியனுக்கும் அதிகமான மலர்கள் இங்கு அமைக்கப்பட்டு வண்ணமயமான பூக்களின் மிகப்பெரிய காட்சியைக் கொண்டுள்ளது. அவற்றில் சில வளைகுடா பிராந்தியத்தில் இதுவரை பயிரிடப்படாத மலர்களாகும்.
ஏராளமான புதுவித வெளிப்புற செயல்பாடுகளுடன் இங்கு உள்ள பல குறிப்பிடத்தக்க பகுதிகளில் கவர்ச்சியான ஒன்று மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் பெண்மணி ஆகும்.
அத்துடன் புதுப்பிக்கப்பட்ட ஆம்பிதியேட்டர் ஒரு அற்புதமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது பார்வையாளர்கள் நேரலை பொழுதுபோக்கு நிகழ்ச்சி மற்றும் பிற நிகழ்ச்சிகளை அனுபவிக்கக்கூடிய ஒரு கண்காணிப்பகமாக செயல்படுகிறது. இதன் உச்சியில், பார்வையாளர்கள் மிராக்கிள் கார்டனின் முழு அமைப்பையும் காணலாம்.
மேலும் இங்கு 400 மீட்டர் நடைப் பாதை பார்வையாளர்களுக்கு மலர்களின் நடுவிலே நடைப்பயிற்சியை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
முக்கிய நுழைவாயிலில் பார்வையாளர்கள் மிகவும் பிரபலமான மற்றும் முக்கியமான சில கார்ட்டூன் கதாபாத்திரங்களால் வரவேற்கப்படுவார்கள்.
இங்குள்ள ஈர்ப்புகளில் எமிரேட்ஸ் A380 விமான டிஸ்ப்ளே மற்றும் கார்டனின் டிஸ்னி அவென்யூவில் உள்ள மிக்கி மவுஸின் 18-மீட்டர் மலர் அமைப்பு ஆகியவை அடங்கும்.
துபாய் மிராக்கிள் கார்டன் வார நாட்களில் தினமும் காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும், வார இறுதி நாட்கள் (வெள்ளி மற்றும் சனி) மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 9:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும் திறந்திருக்கும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கார்டனை இலவசமாக அணுக அனுமதி வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.