பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திற்கும் வாரத்திற்கு மூன்று நாள் விடுமுறையை அறிவித்த ஷார்ஜா…!!
ஷார்ஜாவில் அரசு துறைகளுக்கு வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என அரசு தெரிவித்திருந்த நிலையில், ஷார்ஜாவில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் புதிய வார விடுமுறையை பின்பற்ற ஷார்ஜாவில் உள்ள அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதனையொட்டி பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டரில், ஷார்ஜா தனியார் கல்வி ஆணையம் (SPEA) புதிய வார இறுதி விடுமுறை நாட்கள் ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. மேலும் விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் SPEA கூறியுள்ளது.
கடந்த வாரம், ஷார்ஜா மூன்று நாள் வார இறுதி விடுமுறையை தனது அரசு துறைகளுக்கு அமல்படுத்தியதை தொடர்ந்து அதிக நாட்களை வார விடுமுறையாக அறிவித்த முதல் அரபு நகரமாக பெயரெடுத்துள்ளது.
அமீரகத்தின் மற்ற எல்லா எமிரேட்களிலும் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு வார இறுதி இரண்டரை நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் வெள்ளிக்கிழமை அரை நாள் விடுமுறையாக இருக்கும். ஆனால், ஷார்ஜாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை உண்டு.
ஷார்ஜாவில் உள்ளவர்கள் உட்பட ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் வாரம் முழுவதும் காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை எட்டு மணி நேரம் வேலை செய்வார்கள்.
மற்ற எமிரேட்டுகளில் உள்ள ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் காலை 7.30 முதல் மதியம் 12 மணி வரை என 4.5 மணி நேரம் வேலை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.