அமீரகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ஷார்ஜாவில் ஒவ்வொரு மாதமும் டாக்ஸி கட்டணம் மாற்றப்படுவதாக அறிவிப்பு..!
ஐக்கிய அரபு அமீரக எரிபெருள் குழுவால் அறிவிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலையின் காரணமாக ஷார்ஜாவில் டாக்ஸி கட்டணம் அதிகரிக்கவும், குறையவும் வாய்ப்பிருப்பதாக ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான (SRTA) தெரிவித்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் விலையின் அடிப்படையில் தான் டாக்ஸி கட்டணத்தை நிர்ணயம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து SRTA இன் தலைவர் யூசுப் காமிஸ் அல்-உத்மானி கூறுகையில், “அமீரகத்தில் எரிபொருள் குழு ஒவ்வொரு மாத இறுதியிலும் பெட்ரோல், டீசல் விலையை அறிவிக்கிறது. ஆகஸ்ட் 2015 முதல், உள்ளூர் எரிபொருள் விலையை உலக எண்ணெய் விலையுடன் சீரமைக்க அமீரகம் முடிவு செய்ததிலிருந்து இது நடைமுறையில் உள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக, குறிப்பாக பிப்ரவரியில் ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பிறகு, ஜனவரி 2022 முதல் அமீரகத்தில் பெட்ரோல் விலை 56 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது” என்றார்.
“எரிபொருள் விலையை தாராளமயமாக்கும் கொள்கையின் அடிப்படையில் டாக்ஸி வாகனங்களுக்கான கட்டணக் கணக்கீட்டின்படி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. டாக்சிகளுக்கான கட்டண அட்டவணையில் திருத்தம் செய்யப்படுவது, பயணிகளுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தை மேம்படுத்தவும், இத்துறையின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு செயல்படவும் SRTA முயற்சிகளின் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று SRTA இன் தலைவர் யூசுப் காமிஸ் அல்-உத்மானி தெரிவித்தார்.