UAE: மலையாளத்தில் ட்வீட் போட்ட துபாய் மன்னர்.. அரபியில் பதில் அளித்த கேரள முதல்வர்.. சமூக வலைத்தளங்களில் வைரல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், கேரள முதல்வர் பினராயி விஜயனை அமீரகத்தில் சந்தித்ததைத் தொடர்ந்து ஷேக் முகம்மது அவர்கள் மலையாளத்தில் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த ட்வீட்டுடன் துபாய் ஆட்சியாளர் புதன்கிழமை துபாய் எக்ஸ்போ 2020 இன் இடத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு வழங்கப்பட்ட வரவேற்பின் படத்தையும் பகிர்ந்துள்ளார்.
அதில் “ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவுடன் சிறப்பான உறவைப் பகிர்ந்து கொள்கிறது. துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சியில் கேரள மக்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள்” என்று மலையாளத்தில் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது அவர்கள் ட்வீட் செய்திருக்கிறார்.
இவர் மலையாளத்தில் ட்வீட் செய்ய, கேரள முதல்வர் ஷேக் முகமது பின் ரஷீத்துக்கு அரபு மொழியில் ட்வீட் செய்து நன்றி தெரிவித்துள்ளது அனைவருக்கும் சுவாரஸ்யத்தை அளித்துள்ளது. இந்த ட்வீட்டை கேரள முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
أتمنى لكم وللجميع الصحة والعافيه, أشكركم على تقديرنا لمساهمة هؤلاء من كيرلا في تطوير الإمارات العربية المتحدة ودبي, نود نعمل معا لمزيد تعزيز الرابطة, متواضعا بكرم ضيافتكم واستقبالكم الحار.@HHShkMohd https://t.co/LGuHuRXIRx
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) February 2, 2022
கேரள முதல்வர் பகிர்ந்த ட்வீட்டில் “உங்கள் விருந்தோம்பல் மற்றும் அன்பான வரவேற்பால் மகிழ்கிறேன், தென்னிந்திய மாநிலமான கேரளா ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துபாய் உடனான தொடர்பை மேலும் வலுப்படுத்த விரும்புகிறது” என கூறியுள்ளார்.
புதன்கிழமை அவர்களின் சந்திப்பின் போது, கேரளாவின் வளர்ச்சியில் அமீரகத்தின் ஆதரவிற்காக ஷேக் முகமது பின் ரஷீத் அவர்களுக்கு கேரள முதல்வர் நன்றி தெரிவித்தார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.