UAE: கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்படாத அமீரக நாட்டவர்கள் வெளிநாடு பயணிக்க தடை.. ஜனவரி 10 முதல் அமல்..!!
கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்படாத அமீரக நாட்டவர்கள் வரும் ஜனவரி 10, 2022 முதல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே வேறொரு நாட்டிற்கு பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அமீரகத்தின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் (WAM) தெரிவித்துள்ளது.
அமீரக குடிமக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இந்த பயண தடையானது, அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் (NCEMA) ஒருங்கிணைந்து அமீரக நாட்டின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்தால் எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் புதிய மாறுபாடு கொண்ட வைரஸான ஓமிக்கிரான் தொற்றுநோயின் உலகளாவிய பரவல் மற்றும் COVID-19 நோய்த்தொற்றுகளின் விரைவான அதிகரிப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டும், மற்றும் ஐக்கிய அரபு அமீரக மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்கும் விதமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கான இரண்டு டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டிருந்தாலும் அமீரகத்தை விட்டு வெளியே பயணம் செய்ய கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் எடுக்க வேண்டும் என்றும் அமைச்சகம் அமீரக குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
இருப்பினும், மருத்துவ காரணங்களுக்காகவும், மனிதாபிமான காரணங்களுக்காகவும் தடுப்பூசியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளிநாட்டில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பயணம் செய்ய தடை ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#NCEMA and @MoFAICUAE: Ban on Travel on UAE citizens unvaccinated with #Covid19 vaccine, starting Jan 10, 2022, with a requirement to obtain the booster dose for the fully vaccinated. With an exemption for medically exempted from taking the vaccine, humanitarian & treatment cases pic.twitter.com/zUw1FoSLBt
— NCEMA UAE (@NCEMAUAE) January 1, 2022