இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு ஜூன் 23 முதல் விமான சேவை துவக்கம்..!! எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவிப்பு..!!
துபாயை மையமாக கொண்டு இயங்கும் விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு பயணிகள் விமான சேவையை மீண்டும் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
துபாயின் நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மை உச்சக் குழு வெளியிட்டுள்ள புதிய பயண நடைமுறைகளில், முழு தடுப்பூசி போடப்பட்ட ரெசிடென்ஸ் விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் ஐக்கிய அரபு அமீரகம் திரும்ப அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, எமிரேட்ஸ், ஜூன் 23 புதன்கிழமை முதல், இந்தியாவில் இருந்து, அமீரகத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் என்று தெரிவித்துள்ளது.
விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “புதிய பயண வழிமுறைகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து துபாய்க்கு ஜூன் 23 முதல் பயணிகள் விமான சேவை இயக்கப்படும். துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு தற்போது நிலவி வரும் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து அதனைத் தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு அறிவித்த சமீபத்திய நெறிமுறைகளையும் நடவடிக்கைகளையும் எமிரேட்ஸ் வரவேற்கிறது.” என்று தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கை மேலும் கூறுகையில், “இந்த நெறிமுறைகளுக்கு இணங்க ஜூன் 23 முதல் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் விமான சேவை துவங்கப்படும்” என்றும் அறிவித்துள்ளது.
Emirates welcomes the latest protocols and measures announced by Dubai’s Supreme Committee of Crisis and Disaster Management to allow the safe resumption of passenger travel from South Africa, Nigeria and India to Dubai. (1/3) https://t.co/AFq1HMuLiu
— Emirates Airline (@emirates) June 19, 2021
;
கொரோனா நோய்த்தொற்றுகளின் இரண்டாவது அலை பரவலால் ஏப்ரல் 24 அன்று இந்தியாவில் இருந்து பயணிகள் நுழைவதை ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிகமாக நிறுத்தியது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்தியாவில் ஏறக்குறைய இரு மாதங்களாக சிக்கித் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.