துபாய் : 6 மாதங்களுக்கும் மேல் நாட்டிற்கு வெளியே சிக்கி தவிக்கும் குடியிருப்பாளர்கள் துபாய் திரும்பலாம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே ஆறு மாதங்களுக்கும் மேலாக வசிக்கும் துபாய் குடியிருப்பாளர்கள் தற்பொழுது நாட்டிற்கு திரும்ப முடியும் என்று துபாயில் உள்ள பொது வதிவிட மற்றும் வெளிநாட்டு விவகார இயக்குநரகத்தின் (GDRFA) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலின் காரணமாக ஆறு மாதங்களுக்கும் மேலாக நாட்டிற்கு வெளியே சிக்கித் தவிக்கும் துபாய் குடியிருப்பாளர்கள் துபாயில் உள்ள GDRFA வின் வாடிக்கையாளர் சேவை மைய துறையின் இயக்குநர் மேஜர் சலீம் பின் அலி அவர்கள் இது பற்றி தெரிவிக்கையில், கொரோனா பாதிப்பின் காரணமாக அமீரகத்திற்கு வெளியே 6 மாதத்திற்கும் மேலாக வசிக்கும் துபாய் குடியிருப்பாளர்கள் செல்லுபடியான விசா வைத்திருந்தால் அவர்கள் எவ்வித பிரச்னையும் இன்றி துபாய் திரும்பலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “சில நேரங்களில், விசா ரத்து செய்யப்பட்டிருந்தாலோ அல்லது பிற காரணங்களுக்காகவோ நுழைவு ஒப்புதலுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒப்புதல் நிராகரிக்கப்பட்டால் அல்லது விசாவானது தடைசெய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டால், எங்கள் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள், நாங்கள் அதனை விசாரித்து அதற்குரிய காரணங்களை அறிந்து அதனை தெரியப்படுத்துவோம். GDRFA ஒப்புதல் அங்கீகரிக்கப்பட்டால், எவ்வித இடையூறும் இன்றி தாராளமாக துபாய் திரும்பலாம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
அமீரகத்தை விட்டு வெளியே வசிப்பவர்கள் GDRFA வின் அமர் சென்ட்டரை 0097143139999 என்ற எண்ணில் அல்லது [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.