துபாய் புத்தாண்டு கொண்டாட்டம்: பிரத்யேக பாதை, சாலை மூடல், பேருந்து விபரம் போன்ற அனைத்து தகவல்களும் உள்ளே..!!
துபாயில் நடைபெறவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் மக்களுக்கு போக்குவரத்து இடையூறில்லாமல் சுமூகமான போக்குவரத்தை பராமரிக்க துபாய் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த கொண்டாட்டங்களின் போது துபாய் முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட கேமராக்கள் பயன்படுத்தப்படும் என்று துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.
சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), துபாய் காவல்துறை, துபாய் ஆம்புலன்ஸ் மற்றும் துபாய் சிவில் பாதுகாப்புத்துறை ஆகியவற்றின் குழுக்கள் சுற்றுலா இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பாதுகாப்பைப் பராமரிக்கவும், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்யவும் ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தில் செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் RTA-வின் கட்டளை மையத்தில் இருந்து போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
துபாய் முழுவதும் 29 இடங்களில் வான வேடிக்கை நிகழ்வதால், இது மக்கள் கூட்டம் இல்லாமல் பாதுகாப்பான சூழலில் கொண்டாட்டங்களை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
பாதுகாப்பு மற்றும் அவசரநிலை பொதுத் துறையின் இயக்குநர் அப்துல்லா அல் கைதி, புத்தாண்டு கொண்டாட்டாங்களின் போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முக கவசம் மற்றும் சமூக தூரத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் அல்லது 3,000 திர்ஹம்கள் அபராதத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று மக்களை எச்சரித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்த முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மூன்று பாதைகள்
பாதுகாப்பு குழு புத்தாண்டு தின முக்கிய கொண்டாட்டங்களுக்கு வழிவகுக்கும் மூன்று பாதைகளை அமைத்துள்ளது.
>> இதற்காக நியமிக்கப்பட்ட முதல் பாதை புர்ஜ் கலீஃபா மெட்ரோ நிலையத்திலிருந்து (burj khalifa metro station) ஐலேண்ட் பார்க்கிற்கும் (island park) புர்ஜ் வியூவிற்கு (burj view) பின்னால் உள்ள பகுதிக்கும் குடும்பங்களை அழைத்துச் செல்லும்.
>> மற்றொரு நியமிக்கப்பட்ட பாதையானது புர்ஜ் கலீஃபா மெட்ரோ நிலையத்திலிருந்து வான வேடிக்கை நிகழ்வதை பார்க்கும் பகுதியான சவுத் ரிட்ஜ் (south ridge) வரை பேச்சுலர்களை அழைத்துச் செல்லும்.
>> குடும்பங்களுக்கான இரண்டாவது பாதை ஃபைனான்சியல் சென்டரில் (financial center) இருந்து பவுல்வர்டு (boulevard) பகுதி வரை இருக்கும், அதே சமயம் பேச்சுலர்ககள் சவுத் ரிட்ஜ் நோக்கிச் அழைத்து செல்லப்படுவார்கள்.
>> மூன்றாவது பாதை பிசினஸ் பே மெட்ரோ நிலையத்திலிருந்து (business bay metro station) வருபவர்களுக்கானதாக இருக்கும்.
சாலை மூடல்கள்
>> Mohammed Bin Rashid Boulevard மாலை 4 மணி முதல் 7 மணி வரை மூடப்படும் என்பதால் துபாய் மால் மற்றும் பவுல்வர்டு பகுதிகளில் முன்பதிவு செய்துள்ளவர்கள் மாலை 4 மணிக்குள் அந்த பகுதிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
>> புர்ஜ் கலீஃபா மெட்ரோ நிலையம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்படும்.
>> அல் அசாயல் ஸ்ட்ரீட் (al asayel street), ஓட் மேத்தா ஸ்ட்ரீட்டில் (oud metha street) இருந்து புர்ஜ் கலீஃபாவை நோக்கிச் செல்லும் சாலை, அவசரகால தேவை மற்றும் VIPகளுக்கு அணுகலை அனுமதிக்கும் வகையில் மாலை 4 மணிக்கு மூடப்படும்.
>> லோயர் ஃபினான்சியல் சென்டர் (the lower financial center) மற்றும் அல் சுகுக் ஸ்ட்ரீட் (al sukuk street) இரவு 8 மணி முதல் மூடப்படும்.
>> ஜபீல் 2 (zabeel 2) மற்றும் மேதான் ஸ்ட்ரீட்டிற்கு (meydan street) இடைப்பட்ட பகுதியில் மாலை 4 மணிக்கு தொடங்கி படிப்படியான முறையில் மூடப்படும் மேலும் இது கொண்டாட்டங்கள் முடியும் வரை தொடரும்.
>> வாட்டர் கேனலில் (water canal) உள்ள நடைபாதை பாலங்கள் மூடப்படும், அத்துடன் அப்பகுதியில் உள்ள ஷேக் சயீத் சாலை பிரிட்ஜில் பாதசாரி நடைபாதையுடன் எலிவேட்டர்களும் மூடப்படும்.
போக்குவரத்து
கொண்டாட்டங்கள் முடிந்ததும் மக்களை மெட்ரோ நிலையங்களுக்கு கொண்டு செல்ல RTA 170 பேருந்துகளை நியமிக்கும்.
>> ஷேக் சையத் சாலையில் 70 பேருந்துகள் புர்ஜ் கலீஃபா மெட்ரோவிலிருந்து அல் வாசல் கிளப் (al wasl club), அல் ஜாஃபிலியா நிலையம் (al jafiliya station), அல் மன்கூல் முசல்லா (al mankhool musalla) மற்றும் தேரா சிட்டி சென்டர் (deira city center) ஆகியவற்றிற்கு பயணிகளை ஏற்றிச் செல்லும்.
>> ஷேக் சையத் சாலையில் அபுதாபி செல்லும் 33 பேருந்துகள் புர்ஜ் கலீஃபா மெட்ரோ நிலையத்திலிருந்து அல் சஃபா (நூர் இஸ்லாமிய வங்கி) மெட்ரோ நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச் செல்லும்.
>> 41 பேருந்துகள் பைனான்சியல் சென்டர் ஸ்ட்ரீட்டில் இருந்து அல் வாஸ்ல் கிளப் பார்க்கிங், அல் ஜாஃபிலியா, தேரா சிட்டி சென்டர் மற்றும் அல் மன்கூல் முசல்லா ஆகிய இடங்களுக்கு போக்குவரத்தை வழங்கும்.
>> 8 பேருந்துகள் புர்ஜ் கலிஃபா ஸ்ட்ரீட்டில் இருந்து தேரா சிட்டி சென்டர் நிலையத்திற்கு பொதுமக்களை ஏற்றிச் செல்லும்.
>> 18 பேருந்துகள் பிசினஸ் பே மெட்ரோ நிலையத்திலிருந்து (ஷேக் சயீத் சாலையில்) தேரா சிட்டி சென்டர் நிலையத்திற்கு பொதுமக்களைக் கொண்டு செல்லும்.
>> ரெசிடென்ஸி மற்றும் வெளிநாட்டினர் விவகாரத் துறை பகுதி மற்றும் அல் மன்கூல் மற்றும் அல் வாஸ்ல் கிளப்பில் உள்ள வழிபாட்டு பகுதிகளில் டாக்சிகள் நிறுத்தப்படும்.
>> துபாய் மெட்ரோவின் ரெட் மற்றும் கிரீன் பாதைகள் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிறு அதிகாலை 2:15 மணி வரை தொடர்ந்து 42.15 மணி நேரம் செயல்படும்.
>> அதே போல் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் ஞாயிறு நள்ளிரவு 1 மணி வரை டிராம் இயங்கும்.
இந்த திட்டத்தின் விவரங்களை துபாய் போலீஸ், TA மற்றும் Emaar சமூக ஊடக சேனல்களிலும் சென்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த பாதுகாப்புத் திட்டத்தில், பார்வையாளர்களுக்கு வழிகாட்டவும், முதலுதவி மற்றும் தொலைந்து போன சேவைகளை வழங்கவும், டவுன்டவுன் துபாயில் விநியோக கூடாரங்களும் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.