UAE: தனிமைப்படுத்தல் விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்த அபுதாபி..!! வழிமுறைகள் என்ன…??
அமீரகத்தின் தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் பெரும்பாலான கொரோனாவிற்கான கட்டுப்பாடுகளை நீக்கியதைத் தொடர்ந்து அபுதாபி அரசானது தற்பொழுது கொரோனாவிற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்கும் போது கைப்பட்டையை (wristband) அணியத் தேவையில்லை. அத்துடன் நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கான தனிமைப்படுத்தல் விதி நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தினசரி PCR சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் சுற்றுலா தலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் 90 சதவீத திறனுடன் செயல்படலாம். முக கவசம் அணிவது வெளிப்புற இடங்களில் கட்டாயமில்லை எனினும் விருப்பப்பட்டால் போட்டுக்கொள்ளலாம். அதே நேரத்தில் உட்புற இடங்களில் முக கவசம் கட்டாயமாகும்.
அதுமட்டுமல்லாமல் சமூக விலகல் விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். மேற்கண்ட இடங்களுக்கு கிரீன் பாஸ் மற்றும் EDE ஸ்கேனர்கள் முறை செயல்பாட்டில் இருக்கும். அதே போல் நிகழ்வுகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும். மேலும் தனியார் நிகழ்வுகளுக்கான திறன் 90 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து அபுதாபி அரசு அலுவலகங்களுக்குள் நுழைய, அனைத்து பணியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு கிரீன் பாஸ் கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாத பணியாளர்களில் விலக்கு பெற்றவர்கள் தவிர மற்ற அனைவரும் அரசு அலுவலகங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.