ADVERTISEMENT

தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதை தாமதப்படுத்தும் நிறுவனங்களின் செயல்பாடுகளை தானாகவே சஸ்பென்ட் செய்ய புதிய நடைமுறை.. குவைத் அரசு அறிவிப்பு..!!

Published: 29 Jan 2023, 10:38 AM |
Updated: 29 Jan 2023, 11:03 AM |
Posted By: admin

குவைத்தின் மனிதவளத்திற்கான பொது ஆணையம் (PAM) தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதை தாமதப்படுத்தும் அல்லது சம்பளம் வழங்காத நிறுவனங்களின் கோப்புகளை தானாகவே இடைநிறுத்தம் (automatic suspension) செய்யும் என்ற ஒரு புதிய அறிவிப்பானது தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை உரிய காலத்தில் அவர்களுக்கு வழங்காத நிறுவனங்களின் கோப்புகளை தானாக இடைநிறுத்தம் செய்யும் முறையை செயல்படுத்தியதாக குவைத்தின் செய்தி நாளிதழான அல்-கபாஸ் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த இடைநீக்கத்தைத் தவிர்க்க, நிறுவனங்கள் தொழிலாளர்களின் சம்பளத்தை நிலுவைத் தேதி (due date) முடிந்த ஏழாவது நாளுக்கு முன் டெபாசிட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நிறுவனங்களை இடைநிறுத்தம் செய்யும் முறையை தானாகவே செயல்படுத்துவது தொழிலாளர் சந்தை தொடர்பான சட்டம் மற்றும் PAM விதிமுறைகளுக்கு இணங்குவதாகவும், தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்காக மனித உரிமைகள் தொடர்பான அமைப்புகள் மற்றும் அவற்றின் தரநிலைகளுக்கு இணங்குவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த விதிமுறையை மீறும் நிறுவனம் புதிய பணி அனுமதிகளைப் (work permit) பெற அனுமதிக்கப்படாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த இடைநீக்கம் என்பது தொழிலாளர்களுக்கான தனது நிதிக் கடமைகளை நிறைவேற்றத் தவறியதன் காரணமாக முதலாளி அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்படும் தண்டனைக்குரிய நடவடிக்கையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.