வளைகுடா நாடுகளிலிருந்து இலங்கை செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்..!! நிபந்தனைகளை வெளியிட்ட இலங்கை அரசு..!!
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளிலிருந்து பயணிகள் இலங்கைக்கு செல்ல இலங்கை அரசால் விதிக்கப்பட்டிருந்த பயண தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அமீரகத்தின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின்படி, வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு பயணிக்க விரும்பும் நபர்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதியளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணம் செய்ய விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள்…
இலங்கை செல்லும் அனைத்து பயணிகளும் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட எதிர்மறை PCR சோதனை முடிவை வைத்திருக்க வேண்டும்.
ஆன்டிஜென் சோதனை எனப்படும் புறப்படுவதற்கு முன்பாக மேகொள்ளக்கூடிய சோதனை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
வளைகுடா நாடுகளிலுள்ள ஏதேனும் ஒரு நாட்டிலிருந்து பயணிக்கும் பயணிகள் அந்தந்த நாட்டின் அரசு மற்றும் இலங்கையின் வெளிநாட்டு தூதரகங்களால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை / ஆய்வகத்திலிருந்து பெறப்பட்ட PCR சோதனை முடிவை வைத்திருக்க வேண்டும்.
PCR சோதனை முடிவின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் விதமாக அந்த சோதனை அறிக்கையில் QR குறியீடு / பார் குறியீடு இருக்க வேண்டும்.
இலங்கைக்கு செல்லும் பயணிகள் தங்களை ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் மூலமாகவோ அல்லது இலங்கை சுற்றுலா துறையின் “பயோபபுள்” பாதை வழியாகவோ மட்டுமே நாட்டிற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள்.