இந்தோனேசிய விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அமீரக தலைவர்கள் இரங்கல்..!!
இந்தோனேசியாவில் கடந்த சனிக்கிழமை ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் தனது பயணத்தை தொடங்கிய 4 நிமிடங்களிலேயே விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. தொடர்பிழந்த விமானத்தை அதிகாரிகள் தீவிரமாக தேடியதன் பின்னர் விமானமானது கடலுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் உடைந்த விமானத்தின் பாகங்கள் கடலுக்குள் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜோகோ விடோடோவுக்கு ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் மகுட இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் இந்தோனேசிய தலைவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
அதேபோல், ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் 62 பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.