கொரோனா விதிமீறல்களுக்கான அபராதங்களில் 50% தள்ளுபடியை அறிவித்துள்ள அமீரகம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய நெருக்கடி, அவசரநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) செவ்வாயன்று கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறியதற்காக விதிக்கப்படும் அபராதங்களில் 50 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது. அபராதம் செலுத்த வேண்டிய குடியிருப்பாளர்கள் இரண்டு மாதங்களுக்கு 50% தள்ளுபடியைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த தள்ளுபடி நாளை (மார்ச் 15) முதல் அமலுக்கு வரும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. குடியிருப்பாளர்கள் இந்த தள்ளுபடியில் பயனடையுமாறும், உள்துறை அமைச்சகத்தின் இணையதளங்கள் மற்றும் ஸ்மார்ட் ஆப்ஸ் மூலம் அபராதத் தொகையை உடனடியாகச் செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகமானது கொரோனா விதிகளை மீறும் குடியிருப்பாளர்களுக்கு 50,000 திர்ஹம் வரை அபராதம் விதித்தது. பொது இடங்களில் முக கவசம் அணியாததற்காக 3,000 திர்ஹம் முதல் கொரோனா பாதிக்கப்பட்டு கட்டாய மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை மீறினால் 50,000 திர்ஹம் வரை அபராதம் என பல்வேறு அபராதங்களை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமீரக அரசு விதித்திருந்தது.
அத்துடன் அதிகளவிலான மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மற்றும் நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் மூலம் அமீரகம் உலகின் மிகக் குறைந்த இறப்பு விகிதங்களில் ஒன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.