அமீரகத்தில் நிலவும் கடுமையான தூசிப்புயல்.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை முதல் நிலவி வரும் கடுமையான தூசிப்புயல் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை மற்றும் குடியிருப்பாளர்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதாவது அமீரகத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் சாலையைப் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறு உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் துபாய் உட்பட நாட்டின் சில பகுதிகளில் காலையில் லேசான மழையும் பெய்துள்ளது. அத்துடன் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அபுதாபி விமான நிலையப் பகுதியைச் சுற்றி கிடைமட்டத் தெரிவுநிலையானது (horizontal visibility) 1000 மீட்டருக்கும் குறைவானதாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
குடியிருப்பாளர்களுக்கான வானிலை மையத்தின் ஆலோசனை:
>> போக்குவரத்து விதிகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டவும்
>> உங்களின் மீது நேரடியாக தூசி படும்படி இருப்பதை தவிர்க்கவும்
>> வீட்டிற்குள் தூசி நுழைவதைத் தடுக்க அனைத்து கதவுகளையும் ஜன்னல்களையும் பூட்டவும்
>> அதிகாரப்பூர்வ வானிலை முன்னறிவிப்புகளை அவ்வப்போது கண்காணிக்கவும்
>> அதிகாரபூர்வ அறிக்கைகளை மட்டுமே பின்பற்றவும், வதந்திகளை பரப்புவதைத் தவிர்க்கவும் பொது மக்களை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.