அமீரக செய்திகள்
கொரோனா பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கான விதிகளை புதுப்பித்த அமீரகம்..!!
அமீரகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்றால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருகின்றன.
அதில் தற்போது கொரோனா பாதித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த புதுப்பிப்புகளை ஐக்கிய அரபு அமீரக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அமீரகத்தின் தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான ஆணையத்தின் திருத்தப்பட்ட வழிமுறைகளின்படி, கொரோனா பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் இப்போது முதல் மற்றும் ஏழாவது நாட்களில் அல்லது அறிகுறிகள் தோன்றும் போது மட்டுமே PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.