அமீரகத்தில் மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா.. ஒரே நாளில் 1,000 க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு…!!
அமீரகத்தில் கடந்த ஒரு வாரத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. நேற்று கொரோனா பாதிப்பானது 600 ஐ தாண்டிய நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 1,000 ஐ தாண்டி பதிவாகியுள்ளது.
அமீரகத்தில் இன்று (வியாழக்கிழமை, டிசம்பர் 23, 2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த ஒரு நாளில் மட்டும் 1,002 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 746,557 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு எவரும் பலியாகவில்லை. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 2,154 ஆக இருக்கின்றது.
கடந்த ஒரு நாளில் மட்டும் 339 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 739,616 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பால் அபுதாபியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை இருந்த கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, அமீரகத்தின் பிற பகுதிகளில் இருந்து அபுதாபி பயணிப்பவர்களுக்கு EDE ஸ்கேனர்கள் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்நுழைய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது முறையான கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு நிறுவனங்களுக்கு செல்ல PCR விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.