ஈத் அல் அதாவை முன்னிட்டு குடியிருப்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அமீரக தலைவர்கள்..!!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகின் சில நாடுகளில் இன்று ஈத் அல் அதா பெருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. அமீரக குடியிருப்பாளர்களும் நேற்று முதல் தொடங்கிய விடுமுறையுடன் ஈத் அல் அதாவை கொண்டாடி வருகின்றனர். முஸ்லிம்கள் அனைவரும் இன்று அதிகாலை சிறப்பு தொழுகையிலும் கலந்து கொண்டு தங்களின் அன்பையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.
ஈத் அல் அதாவை முன்னிட்டு அமீரக தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களை அமீரக குடியிருப்பாளர்களுக்கு தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீராகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களும் அனைத்து அரபு மற்றும் இஸ்லாமிய மக்களுக்கும் ஈத் அல் அதா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது அவர்கள் தனது ட்விட்டரில், முஸ்லிம்கள் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பண்டிகை காலத்தை கொண்டாட வாழ்த்தியுள்ளார். மேலும் “உங்களின் கீழ்ப்படிதலையும் பிரார்த்தனைகளையும் ஏற்றுக்கொள்ளும்படி கடவுளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தனது ட்விட்டரில், “இந்த குறிப்பிடத்தக்க நாளில், ஹஜ் யாத்ரீகர்களின் நற்செயல்களை ஏற்குமாறு சர்வவல்லமையுள்ள கடவுளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஆசீர்வதிக்கப்பட்ட இந்த நாளில் எங்கள் அன்பான மக்கள் மற்றும் அரபு மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
துபாயின் முதல் துணை ஆட்சியாளரும், துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் தனது வலது செய்தியில், “ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆட்சியாளர்களுக்கும், அமீரக மக்களுக்கும், அதே போல் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கும் ஈத் அல் அதாவை முன்னிட்டு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஈத் நாளில் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி ஆண்டு முழுவதும் தொடர எனது வாழ்த்துக்கள்” என்றும் கூறியுள்ளார்.