UAE: ரெட் சிக்னலில் நிற்காமல் சென்ற ஓட்டுநரின் கவனக்குறைவால் பெண் ஒருவர் மரணம்!! – சிறைத்தண்டனையுடன் அபராதம் விதித்த நீதிமன்றம்..!!
அமீரகத்தில் போக்குவரத்து விதியை மீறி சாலையில் ரெட் சிக்னலை தாண்டிய ஒரு அரேபிய ஓட்டுநரின் கவனக்குறைவால், சாலையை கடக்க முயன்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் இந்த சம்பவத்தில் மற்றொரு பெண் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
ஓட்டுநர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், கோர்ஃபக்கான் மேல்முறையீட்டு நீதிமன்றம் விபத்துக்குள்ளான வாகனத்திற்கு 5,000 திர்ஹம் அபராதம் விதித்ததுடன், வாகன விபத்தில் இறந்த அப்பெண்ணிற்கு 200,000 திர்ஹம்ஸ் இரத்தப் பணத்தை (bood money) செலுத்துமாறு உத்தரவிட்டது.
மேலும், ரெட் சிக்னல் சந்திப்பில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையின் சம்பவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய அரேபிய இளைஞருக்கு எதிராக பின்வரும் மூன்று குற்றச்சாட்டுகளும் பொதுவழக்கு துறையால் பதிவு செய்யப்பட்டது.
அதன்படி, சிகப்பு விளக்கில் நிற்காமல் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து, ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு மற்றும் கவனக்குறைவால் மற்றொரு பெண்ணுக்கு ஏற்பட்ட காயம் ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
பொது வழக்குரைஞர் முன்வைத்த இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவுகள் (88) மற்றும் (87) விதிகளின்படி, கவனக்குறைவினால் மரணம் மற்றும் காயத்தை ஏற்படுத்திய குற்றவாளிக்கு சிறைத்தண்டனை விதித்து கோர்ஃபக்கான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.