அமீரகத்தில் நிலவும் நிலையற்ற வானிலை.. தூசியுடன் 40 கிமீ வேகத்தில் காற்று வீசும்.. NCM அறிக்கை வெளியீடு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (ஜூலை 11, செவ்வாய்கிழமை) வானிலை ஓரளவு மேகமூட்டமாகவும், பகல் நேரத்தில் சில நேரங்களில் தூசி நிறைந்ததாகவும் இருக்கும் என்று தேசிய வானிலை மையம் (NCM) அறிவித்துள்ளது.
அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, பிற்பகலில் வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் என்றும் அமீரகத்தின் சில கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மேகமூட்டமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று இரவு மற்றும் நாளை புதன்கிழமை காலையில் அமீரகத்தின் சில பகுதிகளில் ஈரப்பதமாக இருக்கும் என்றும், சில கடலோரப் பகுதிகளில் மூடுபனி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் NCM கூறியுள்ளது.
மேலும், லேசானது முதல் மிதமான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இது பகலில் 10 – 25 கிமீ வேகத்திலும், 40 கிமீ வேகத்தை எட்டும் போது தூசியுடன் காற்று வீசக்கூடும் என்றும் NCM தெரிவித்துள்ளது. அரேபிய வளைகுடாவில் கடல் சற்று கொந்தளிப்பாகவும், ஓமான் கடலில் மிதமானது முதல் சற்று கொந்தளிப்பாகவும் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அமீரகத்தில் வெப்பநிலையை பொருத்தவரை அதிகபட்சமாக இன்று அபுதாபியில் 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும், துபாயில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும் கூறியுள்ளது.
இந்நிலையில், நேற்று திங்களன்று நாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலையாக 48.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை சைஹ் அல் சேலத்தில் (துபாய்) மதியம் 2:45 மணிக்கும், மெசைராவில் (அல் தஃப்ரா பிராந்தியம்) மதியம் 3:00 மணிக்கும் பதிவாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, அபுதாபியில் உள்ள அல் தஃப்ரா பகுதியின் ஹமீமில் 49.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதுவே இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என்பது குறிப்பிடத்தக்கது.